சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். பன்வாரிலால் புரோகித்துக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமானம் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை மற்றும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் தமிழகத்தில் அரசியல் நெருக்கடி நிலவி வரும் சூழலில் புதிய ஆளுநர் பதவியேற்பு பெரும் எதிர்பார்பை நிலவி இருக்கிறது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் 9.30 மணி அளவில் பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகள், உயரதிகாரிகள் என அனைவரும் பங்கேற்றனர். பாஜக கட்சியை சேர்ந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மற்றும் அவருடைய முக்கிய பொறுப்புகளை சார்ந்தவர்களும், மற்றும் பிற கட்சிகளை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ஆளுநருக்கு வாழ்த்து
புதிய ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலாலுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மற்றும் அமைச்சர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,சபாநாயகர் தனபால், தம்பிதுரை, டி.ஜி.பி, அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித்தை இனிதே வரவேற்கிறேன் என டி.டி.வி.தினகரன் டிவிட்டரில் அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Post a Comment
0 Comments