Type Here to Get Search Results !

வடசென்னையில் அதிக பாதிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி; கொரோனா காட்டிய இரக்கத்தை பசியும், பட்டினியும் காட்டவில்லை; டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்திய அணி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

வடசென்னையில் அதிக பாதிப்பு; சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி
உலக முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்  சென்னையில் பாதிப்பு அதிகளவு உள்ளது. நாளுக்கு நாள் 100 கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது என்றார். மேலும், பேசிய அவர், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகமாகவுள்ளது. வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. ராயபுரம், தண்டையார்பேட்டை  திரு.வி.க நகர் ஆகிய மண்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. வடசென்னை பகுதிகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

முதியவர்கள் வெளியே செல்வதை தடுக்க இளைஞர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மண்டலங்களில் முதியவர்கள் வெளியே செல்வதை தடுக்கவும், முதியவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை  தன்னார்வலர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள்  பணியமர்த்தப்பட உள்ளனர். சென்னை மாநகராட்சி பணி செய்யும் 35,000 ஊழியர்களில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில்  அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வரும் நாட்களில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால் தான் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க முடியும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றில் 28 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்றை  குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும். கடந்த 28 நாட்களாக தொற்று பதிவாகாத இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து விடுவிக்கப்படும். எளிதில் தொற்று தாக்க வாய்புள்ள நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


கொரோனா காட்டிய இரக்கத்தை பசியும், பட்டினியும் காட்டவில்லை: சென்னையில் உயிரிழந்த தொழிலாளி
சென்னையில் யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு முதியவர் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் உண்ண உணவு இன்றி பசியால் உயிரிழந்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி ரவி. 58 வயதான இவருக்கு குடும்பம் என்று யாரும் இல்லை. வேலைக்குச் சென்று கிடைத்ததை சாப்பிட்டு சாலையிலேயே வாழ்நாளை கழித்து வந்தவர்.

நீண்ட நாட்களாக இவருக்கு ஆஸ்துமா நோய் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலை எதுவும் இல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரவி சுற்றித்திரிந்து உள்ளார். அவ்வப்போது தன்னார்வ நபர்கள் கொடுக்கும் உணவை கொண்டு சில நாட்களை கழித்துள்ளார்.

அதன் பின்னர் எங்கேயும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை எடுக்காததால் மாத்திரையும் கிடைக்காததால் நோய் முற்றி உள்ளது. ஒரு பக்கம் பசி கொஞ்சம் கொஞ்சமாக அவரை கொலை செய்து வந்திருக்கிறது. பட்டினி கிடக்கும் நாட்கள் அதிகரிக்க தொடங்கியது.

வேறுவழியில்லாமல் சென்ட்ரலில் இருந்து தன்னுடைய சகோதரியின் வீடு இருக்கும் ஜாபர்கான்பேட்டைக்கு வந்துள்ளார். இருமிக்கொண்டே அவர் வருவதை பார்த்த வீட்டின் உரிமையாளரும் அவரது சகோதரியும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது. இருப்பினும் அவர் மீண்டும் சகோதரி வீட்டுக்கு வந்த போது அக்கம்பக்கத்தினர் எதிப்பு தெரிவித்த்தால் வேறு வழியின்றி மீண்டும் ஜாபர்கான்பேட்டை சாலை ஓரத்தில் சில நாட்களை கழித்தார்.அவரால் எழுந்து சென்று எங்கேயும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. பசி பட்டினி ஆஸ்துமா இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்ததால் நேற்று மாலை ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் வந்து உடலை எடுத்துச் சென்றனர்.

எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் சாலையோரத்தில் சுற்றி திரிந்த ரவி மீது கொரோனா இரக்கம் காட்டி இருக்கிறது. ஆனால் பசியும் பட்டினியும் அவர் மீது இரக்கம் காட்டவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்திய அணி 
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னேறிய நிலையில் 2வது இடத்தில் நியூஸிலாந்தும், 3வது இடத்தில இந்தியா இந்தியா உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad