Type Here to Get Search Results !

சென்னையில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முன் வர வேண்டும்; மதுரையில் ஊரடங்கு தொடர்கிறது: 6-ந்தேதி முதல் கடைகள் திறக்கலாம் - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னையில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முன் வர வேண்டும் குமரி கலெக்டர் வேண்டுகோள்
சென்னையில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடைகள்

குமரி மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பேக்கரிகள் வழக்கம்போல அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இயங்கும். மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவித்திருந்தாலும், ஒரே நேரத்தில் அனைத்து நிறுவனங்களையும் திறப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதி வழங்கப்படும். தனிக்கடைகள் வருகிற 9-ந் தேதி வரை திறக்க அனுமதி கிடையாது.

குமரியில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய 4 பகுதிகள் ஏற்கனவே கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை சென்ற நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த நபர் வசித்த செறுதிகோணம் பகுதியை புதிதாக கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் அப்பகுதிகளுக்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து குமரி மாவட்டம் வந்தவர்கள், தாங்களாகவே முன்வந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 1077, 04652231077 ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தொழிற்சாலைகள்

குமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊரக பகுதிகளில் மட்டும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரையில் ஊரடங்கு தொடர்கிறது: 6-ந்தேதி முதல் கடைகள் திறக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தணிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் வினய் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசால் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எந்த வித தங்கு தடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

அனுமதி சீட்டுகள்

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம். பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளை தொடங்க இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை தாங்கள் இயக்கும் பிரத்யேக பஸ்கள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்துவரவேண்டும்.

திருமண நிகழ்ச்சி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும். கால் டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா போன்றவை இயங்காது. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

மதுரை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களை கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படலாம். நகர்ப்புறங்களில் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

6-ந் தேதி முதல்....

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதால் புதிய அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப் பொருட்கள், மின் சாதன விற்பனை கடைகள், செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளும் வருகிற 6-ந் தேதி முதல் திறக்கலாம்.

இதுதவிர வேறு எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கு மதுரை மாநகராட்சி பகுதியில் தற்பொழுது அனுமதி இல்லை. வரும் நாட்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகள் மதுரை மாநகராட்சி பகுதியில் படிப்படியாக தளர்த்தப்படும்.

உணவகங்கள்

அதே போல் மதுரை மாநகராட்சி தவிர புறநகர் பகுதிகளிலும் அனைத்து தனிக்கடைகளும் 6-ந்தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் அனைவரும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் www.tne-pass.tne-ga.org என்ற இணைய தள முகவரியில் மட்டும் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூட கூடாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு விதித்துள்ள விதி முறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை மறுநாள் முதல் இயக்கலாம்: கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளை நாளை மறுநாள் முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சரால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தொழில் நிறுவனங்களுக்கு தளர்த்த உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது தொழில்நிறுவனங்களை இயக்கிட விதிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆணையில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்கிட விதிமுறைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விதிமுறைகளின் படி பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு mhskgi@gmail.comமின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கான வாகன அனுமதி சீட்டு பெற https:\\tne-pass.tne-ga.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad