Type Here to Get Search Results !

மக்கள் அச்சப்பட தேவையில்லை, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடல் - ராதாகிருஷ்ணன் பேட்டி; ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் கலெக்டர் ஷில்பா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனவால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  30 பேர் பலியாகி உள்ளனர்.  சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தநிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் மிக அதிகம்.

கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயம்பேட்டுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு.

பரிசோதனையை அதிகரித்துள்ளதால் பாதிப்பு அதிகமாக தெரிய வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க கோயம்பேடு மொத்த காயகறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறி கடைகளை திருமழிசைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழில்கள் விவரம்
திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் எந்தெந்த தொழில்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அரசு உத்தரவிட் டுள்ளது.

ஜவுளி, நகைக் கடைகள்

அதன்படி திருச்சி மாவட்டத்தில் 6-ந் தேதி முதல் பெரிய தொழிற்சாலைகள் தனியாக விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம். ஊரக பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் செயல்படலாம். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி) 50 சதவீத பணியாளர்களை கொண்டு குறைந்தபட்சம் 20 நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், டீ கடைகள், முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்கள், நான்கு சக்கர, இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள், நகைக் கடைகள், குளிர்பதன வசதியுடன் கூடிய ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. கார், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவதற்கு அனுமதி இல்லை.

கட்டுமான பணிகள்

நகர்ப்புற பகுதிகளில் கட்டுமான பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்கள் ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். தினசரி அழைத்து வர அனுமதி கிடையாது.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மட்டும் வணிக செயல்பாடுகளும் மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவங்கள், ஏ.டி.எம். ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படலாம்.

இந்த அறிவிப்பின்படி நோய் தடுப்பு கட்டுப்பாடு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

பள்ளி, கல்லூரிகள்

பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக் கப்பட்ட தடை நீடிக்கும். திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகம், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டஅரங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கான தடை நீடிக்கும். பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். ஓட்டல், ரிசார்ட்டுகள் செயல்படாது. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் அரசு விதிமுறைப்படி அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விதிமுறை தளர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதை நெல்லை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 3-ம் கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலங்களில் சில தளர்வுகளை அமல்படுத்திட தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.

ஆரஞ்சு மண்டலம்

தமிழகத்தில் நோய் தொற்று உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்பட, அரசின் விதிமுறையின் படி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயக்கிடவும், பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி.மெக் கானிக், தச்சு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பணி மேற்கொள்ளவும் அரசு ஆணையிடப்பட்டு உள்ளது.

விதிமுறை தளர்வு

இந்த தளர்வுகள், விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வுகள் செய்யப்படும். நோய் தாக்கம் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் நோயின் விளைவுகளை அறிந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் முக கவசம் அணிவதோடு, ஒருவருக்கு ஒருவர் கூடி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒருவருக்கும், மற்றொருவருக்கும் இடையே 3 அடி தூரம் இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் அவசர உதவி தேவைப்பட்டால் 108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

இந்த நோய் பரவுவதை தடுக்க வீட்டில் இருந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்று முதல்-அமைச்சர் கேட்டு கொண்டதன் படி வீட்டை விட்டு வெளியே வராமல் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி இயக்குனர் (கனிம வளம்) சத்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் பட்டியல் அறிவிப்பு

இதற்கிடையே கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்த ஊர்களின் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் 33-வது வார்டு பகுதியில் உள்ள அசூரா கீழத்தெரு, அண்ணா வீதி, சப்பானி அலிம் கீழத்தெரு, மேலப்பாளையம் 37-வது வார்டு பகுதியில் உள்ள மேத்தமார்பாளையம் 1, 2, 3, 4 ஆகிய தெருக்கள், பத்தமடை வடக்கு ரதவீதி, காயிதேமில்லத் தெரு, கவர்னர் சாலை, பற்பகுளம் ஜான் டிவைன் சிட்டி” என்று கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad