Type Here to Get Search Results !

காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது: கள்ளக்காதலை கண்டித்த பெண் குத்திக்கொலை - அண்ணன் மகனுக்கு வலைவீச்சு; காசியிடம் ஏமாந்த விஐபிக்களின் பெண் வாரிசுகள் வாய் திறக்க மறுப்பு

காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 35). தொண்டமாநத்தம் அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு தொண்டமாநத்தம் பகுதியில் வேலையை முடித்து விட்டு, தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கந்தசாமி வந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கணவன் இறந்த பின்னர் புவனேஸ்வரி முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்ததும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற அஜித்குமார் (24) என்பவர் புவனேஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதும் கந்தசாமியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இதனையடுத்து கந்தசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி, விபத்திற்கு பின் தலைமறைவாக இருந்த லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமாரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் சொல்லியே வாடகை கார் மூலம் கந்தசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கந்தசாமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர். கந்தசாமி வெளியூர் செல்லும்போது தனது நண்பரை நம்பிக்கையுடன் வீட்டு காவலுக்கு விட்டு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருக்கும், கந்தசாமி மனைவி புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். இது கந்தசாமிக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் ஒருநாள் கந்தசாமி வேலை விஷயமாக தொண்டமாநத்தம் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அஜித்குமாரும், புவனேஸ்வரியும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தசாமி அவர் களை நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கந்தசாமியை அஜித்குமார் தாக்கியுள்ளார்.

இது குறித்து கந்தசாமி வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது அங்கு வந்த புவனேஸ்வரியின் சகோதரர் குமாரவேலு தனது தங்கையை எப்படி காவல் நிலையம் வரை அழைத்து வரலாம் என்று கேட்டு புவனேஸ்வரியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கந்தசாமி, குமாரவேலு வீட்டுக்கு சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது புவனேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கந்தசாமியை தாக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் கந்தசாமி புகார் செய்தார். ஆனால் போலீசார் அவர் களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அஜித்குமார், தனது கள்ளக்காதலி புவனேஸ்வரியை சந்திக்க முடியாமல் தவித்தார். இது குறித்து தனது நண்பர் பிரவீன் குமார் என்பவரிடம் தெரிவித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து புவனேஸ்வரி, அவரது கள்ளக்காதலன் அஜித்குமார், பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கந்தசாமியை காரை ஏற்றி கொலை செய்து விபத்து போல் நாடகமாடுவது என முடிவு செய்து அதன்படி சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய கந்தசாமியை பிரவீன்குமார் காரை ஏற்றி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து புவனேஸ்வரி, கள்ளக்காதலன் அஜித்குமார், டிரைவர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காசியிடம் ஏமாந்த விஐபிக்களின் பெண் வாரிசுகள் வாய் திறக்க மறுப்பு
குமரி காவல்துறையில் உள்ள பலர் காசி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதால், ஆபாச வீடியோ தொடர்பாக பல விஐபிக்களின் பெண் வாரிசுகள் மவுனம் காத்து வருகிறார்கள்.  நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்ற சுஜி (26), சமூக வலை தளங்களில் பழகி பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள வீடியோக்களில் இருக்கும் இளம்பெண்கள் பற்றி காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, தன்னுடன் 2 நண்பர்கள் கூட்டாளிகளாக இருந்தனர் என சுஜி தெரிவித்தார்.

இதன்பின், அந்த வீடியோக்கள் தொடர்பாக சில விவரங்களை மட்டும் போலீசாரிடம் சுஜி  கூறினார். சில வீடியோக்கள் மற்றும் போட்டோக்களில் இளம்பெண்கள் போதையில் உள்ளனர். வீடியோவில், இளம்பெண்கள், மாணவிகள் மட்டுமின்றி திருமணமான குடும்ப பெண்கள் சிலரும் உள்ளனர். இவர்களில் மகள்களை ஏமாற்றிய பின் அந்த போட்டோக்கள், வீடியோக்களை காட்டி தாயையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர்.  இந்த தகவல்களும் காவல்துறைக்கு வந்துள்ளது. சில வீடியோக்களில் காசியுடன், மிகவும் விருப்பப்பட்டு பெண்கள் இருப்பது, பேசுவது போன்ற காட்சிகளும் உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.

இதுதவிர குமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை, வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களின் மகன்கள், மகள்கள், குடும்பத்தினர் இணைந்து தனி வாட்ஸ்அப் குழுக்கள் வைத்துள்ளனர். இந்த வாட்ஸ்அப் குழுவில் சுஜி  இடம் பெற்றுள்ளார். வி.ஐ.பி.க்களின் பெண் வாரிசுகள் சிலர் பியூட்டி பார்லர், ஜிம் செல்லும் போது காசியையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு நட்புடன் பழகி, பல வி.ஐ.பி.க்களின் படுக்கை அறை வரை காசி சென்று வந்துள்ளார்.

 இதில் பங்கேற்றுள்ள வி.ஐ.பி.க்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்று போலீசார் கூறி உள்ளனர். காவல்துறையில் உள்ள பலர் காசியுடன் நெருக்கமாக இருந்தவர்கள். இதனால் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறி உள்ளனர்.  அதனால், வழக்கை முடிக்கும் வகையிலான வேலைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.

கொளத்தூர் அருகே, கள்ளக்காதலை கண்டித்த பெண் குத்திக்கொலை - அண்ணன் மகனுக்கு வலைவீச்சு
சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி குணசுந்தரி(வயது 37). இவருடைய தம்பி லோகு. கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

குணசுந்தரியின் அண்ணன் மகனான கணேசன்(26) என்பவரும் அதே கொளத்தூர் பாலாஜி நகர் முதல் பிரதான சாலையில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணேசனின் மனைவி அருள்செல்வி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஒரே பகுதியில் வசித்து வந்த கணேசனுக்கும், சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது.

தனது தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்த குணசுந்தரி, முறை தவறிய இந்த கள்ளக்காதலை கைவிடும்படி கணேசனை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர், கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார். இதனால் அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், சமையல் அறையில் இருந்த கத்தியால் அத்தை என்றும் பாராமல் குணசுந்தரியை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் குணசுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad