Type Here to Get Search Results !

மதுரையில் தடையை மீறிய 1896 பேர் கைது: விழிப்புணர்வு இல்லாமல் வீதிக்கு வரும் மக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் மனிதநேயம்: சர்க்கஸ் கலைஞர்கள், விலங்குகளுக்கு உணவு வழங்கிய போலீசார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உணவின்றி தவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள், விலங்குகளுக்கு போலீசார் உணவு வழங்கி தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

full-width கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போலீசார், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும், விலங்களுக்கும் உணவுகளை வழங்கி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சர்க்கஸ் கூடாரம் அமைத்து இருந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்க்கஸ் கூடாரம் மூடப்பட்டது. வருமானம் இல்லாததால் அந்த சர்க்கஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அந்த சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த 2 ஒட்டகங்கள் மற்றும் 2 குதிரைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்தனர்.

இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் நேற்று ஈக்காட்டில் உள்ள சர்க்கஸ் கூடாரத்துக்கு சென்று அங்கிருந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கும், ஒட்டகங் கள் மற்றும் குதிரைகளுக்கும் உணவு வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சர்க்கஸ் கலைஞர்களுக்கும், விலங்குகளுக்கும் தொடர்ந்து உணவு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஊரடங்கு உத்தரவால் ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு உள்ளன. ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆந்திராவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டு இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால் ஓட்டல்கள், இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் கழிவுகள் தின்றுவிட்டு உலா வந்த 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தற்போது உணவின்றி அவதிப்பட்டு வந்தன.

இதையடுத்து போலீஸ் ஏட்டு ரமேஷ், இவ்வாறு உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு கடந்த 22-ந்தேதி முதல் பிஸ்கட், பிரட் மற்றும் தனது வீட்டில் இருந்து தயார் செய்து எடுத்து வரும் உணவை வழங்கி வருகிறார். போலீஸ் ஏட்டுவின் இந்த மனிதநேயத்தை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

அதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் ஊராட்சியில் ஏழைகள், கூலி தொழிலாளிகள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் உணவின்றி அவதிப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் நேற்று 500 ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினர். ஊராட்சிமன்ற தலைவி பரமேஸ்வரி பொன்னுசாமி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு இல்லாமல் வீதிக்கு வரும் மக்கள்: மதுரையில் தடையை மீறிய 1896 பேர் கைது
144 தடை உத்தரவை மீறியதாக மதுரை நகரில் இதுவரை 1896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு இல்லாமல் வீதிக்கு வரும் மக்களால் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் உத்தரவின்படி போலீசார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் தெருக்களில் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் கூட்டம் அதிகமாக கூடி வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்க கூடிய கடைக்காரர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது.

மேலும் மதுரை நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காகவும், பொதுமக்களின் நலன் கருதியும் வைகை ஆற்றின் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் மதுரை நகரில் குருவிக்காரன் சாலை பாலம், வைகை ஆற்றில் போடப்பட்ட தற்காலிக பாலம், ஓபுளாபடித்துறை பாலம், செல்லூர்-சிம்மக்கல் இணைப்பு பாலம், ஆரப்பாளையம்-தத்தனேரி இணைப்பு பாலம், செல்லூர்- எல்.ஐ.சி.பாலம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நகரில் உள்ள மற்ற பாலங்கள் மருத்துவம் தொடர்பான அவசர காலத்திற்கும், அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காகவும் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் போலீசாரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் எந்த நேரமும் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் சமூக இடைவெளி என்பது நகரில் கேள்விக்குறியாக உள்ளது. இதனை தடுக்க கோரிப்பாளையம் வைகை ஆற்றின் பாலம் வழியாக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரித்த போது ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அங்கு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேவையில்லாமல் அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, மதுரை நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் தடை உத்தரவை கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கும், போலீசாருக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையில் கடந்த 17 நாட்களில் நகரில் தடை உத்தரவை மீறியதாக 1896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,450 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் விழிப்புணர்வு இல்லாமல் அதிக அளவில் மக்கள் சுற்றி திரிகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி பலர் சுற்றி திரிவதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும் அவர்கள் அதிக அக்கறை கொள்வது இல்லை.

எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கடும் நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதற்கு நேற்று மதுரை கோரிப்பாளையம் பாலம் பகுதியில் வந்த வாகன ஓட்டிகளே சாட்சி. எனவே இனியாவது மக்கள் பொறுப்புடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என போலீஸ், மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad