Type Here to Get Search Results !

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சளி-காய்ச்சல் உள்ளதா? என வீடு, வீடாக அதிரடி ஆய்வு - தூத்துக்குடி சுகாதாரத்துறை அதிகாரிகள்

ரூ.850-க்கு 18 வகையான மளிகை பொருள் தொகுப்பு - மாநகராட்சி ஏற்பாடு
15 நாட்களுக்கு தேவைப்படும் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய ‘காம்போ பேக்’ ரூ.850-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

full-width கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர், பி.டி. ராஜன் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 80 நடமாடும் கடைகள் கோடம்பாக்கம் மண்டலத்திலும், 450 நடமாடும் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மற்ற மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடமாடும் கடைகள் மேலும் அதிகரிக்கப்படும்.

இந்த நடமாடும் மளிகை கடையில் 4 நபர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய ‘காம்போ பேக்’ ரூ.850-க்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பிரதிநிதிகள், மேற்பார்வை பொறியாளர், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரிக்‌ஷா தொழிலாளர்கள்
ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல் லாததால் வாழ்வாதாரம் இன்றி பரிதவிப்பதாக சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தினமும் இலவச உணவை எதிர்பார்த்தே நாட்களை நகர்த்துவதாகவும் புலம்புகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி வருவோர் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் செயல்பாட்டு நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலையோர வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதேபோல் மக்கள் நடமாட்டத்தை வைத்தே தினமும் காசு பார்க்கும் சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் நடமாட்டமே சைக்கிள் ரிக்‌ஷா தொழிலுக்கு பிரதானம். இவர்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் வருமானம்தான் இவர்களது குடும்பத்துக்கு ஆதாரம். தற்போது வருமானம் இல்லாததால் இவர்களில் பெரும்பாலானோர் சாலைகளிலேயே தங்கி இருப்பதாகவும், தினமும் இலவச உணவை எதிர்நோக்கியே வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் லோகநாதன் (வயது 57) என்பவர் கூறியதாவது:-

சென்டிரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் ரிக்‌ஷா தொழிலை நம்பியே உள்ளனர். சென்டிரலுக்கு செல்லவும், சென்டிரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல விரும்பும் பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரிகள் போன்றோர் சைக்கிள் ரிக்‌ஷாவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். குறைந்தபட்சம் ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.50 வரை கூலி பேசி சுமையை எடுத்துச் செல்வோம். மக்கள் நடமாட்டத்தை பொறுத்தே எங்களின் வாழ்க்கை சக்கரமும் சுழன்று வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியே நடமாடுவதே இல்லை. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. எங்கள் தொழிலும் படுமோசமாகி விட்டது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு சென்றால் அன்றாட செலவுக்காக காசு கேட்கும் குடும்பத்தாரை எப்படி சமாளிப்பது? என்றே தெரியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக சாலையிலேயே தங்கியுள்ளோம். கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்க்கை நகர்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், “தினமும் சாலையில் சிலர் கொடுக்கும் இலவச உணவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கிடைக்கும் உணவுகளை சேமித்து வீட்டுக்கு எடுத்து செல்லும் நிலையும் தொடர்கிறது. வருமானம் இல்லாததால் மிகுந்த வேதனையில் வாழ்கிறோம். இந்த நிலை என்று மாறுமோ? தெரியவில்லை” என்றார்.

சாலையோர வியாபாரிகள் மற்றும் தங்களைபோல கூலித்தொழிலாளர்களுக்கு அரசு தகுந்த உதவிகளை செய்யவேண்டும் என்பதே சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என உற்சாகமாக பெடலை அழுத்தி சைக்கிள் ரிக்‌ஷாவை ஓட்டியவர்கள், தற்போது சாலையோரங்களில் தூங்கி காலத்தை கழித்து வருவது வேதனையே.

டாக்டர் ஜோடிக்கு கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்
டாக்டர் ஜோடிக்கு கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

ஈரோட்டை சேர்ந்தவர் டாக்டர் ஆர்.சதாசிவம். இவருடைய மனைவி காந்திமதி. அந்த தம்பதியரின் மகன் டாக்டர் எஸ்.கிருஷ்ணக்கண்ணன். இவருக்கும். திண்டல் வித்யாநகர் பகுதியை சேர்ந்த பி.முத்துதொண்டைமான் எம்.அருணாதேவி தம்பதியரின் மகள் டாக்டர் கே.எம்.ஜெயஸ்ரீ வஞ்சிநாயகிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருமண நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனினும் பெரியோர்கள் நிச்சயித்தபடி நேற்று எளிமையாக திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் பெற்றோர், மிக நெருங்கிய உறவினர்கள் சுமார் 20 பேர் கூடினார்கள்.

திண்டல் வித்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் புதுமண உறவில் இணைந்த டாக்டர் ஜோடி திருமணம் செய்து கொண்டது. விழாவில் கலந்து கொண்டவர்கள் என்று அனைவரும் முகக்கவசம் அணிந்தும், இடைவெளி விட்டும் நின்று மணமக்களை வாழ்த்தினார்கள். மணமக்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மணமகனின் தந்தை டாக்டர் ஆர்.சதாசிவம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண ஜோடிக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை-நாகர்கோவில் இடையே தினமும் இயக்கப்படும் பார்சல் சிறப்பு ரெயில்களில் அனுப்ப வேண்டிய பொருட்கள் என்னென்ன?
மதுரை-நாகர்கோவில் இடையே தினமும் இயக்கப்படும் பார்சல் சிறப்பு ரெயில்களில் அனுப்ப வேண்டிய பொருட்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால், பால், மளிகை பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்னக ரெயில்வே சார்பில் மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த வாரம் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. அதேபோல, நேற்று சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் சிறப்பு பார்சல் ரெயில் இயக்கப்பட்டது. இதில் சென்னையில் இருந்து 133 பண்டல்கள், விழுப்புரத்தில் இருந்து 34 பண்டல்கள் சானிடைசர்கள், முக கவசம், கையுறை மற்றும் ஊசி, மருந்துகள் மதுரை வந்தன. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு உணவுப்பொருட்கள் பார்சல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ரெயில்கள் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறும் வரை தினசரி இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டு மதுரைக்கு மதியம் 1.40 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு ஒரு சிறப்பு பார்சல் ரெயில் புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. இரவு 10 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த ரெயில்களில் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்கலாம். பொருட்களை அனுப்ப விரும்புபவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மீன்களின் விலை உயர்வால் ராமநாதபுரத்தில் கருவாடுக்கும் கிராக்கி
மீன்களின் விலை உயர்வால் ராமநாதபுரத்தில் தற்போது கருவாடுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

ஒரு சில கடலோர கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் சிறிய வள்ளம், வத்தை போன்றவற்றின் மூலமாக கரைவலை மீன்பிடிப்பு மூலம் சின்னஞ்சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். இவை மார்க்கெட்டுக்கு வந்த உடனேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சூடை மீன்கள் தற்போது ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து மீன் பிரியர்கள் விலை உயர்வால் மீன்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் மீன்களுக்கு மாற்றாக அசைவ பிரியர்கள் கருவாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தடை உத்தரவு காரணமாக கருவாடுகளின் உற்பத்தியும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கருவாடுகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.

ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனை செய்து வரும் சபீக் என்பவர் கூறியதாவது:- கருவாடு வகைகளான சீலா கிலோ ரூ.800-க்கும், நெத்திலி ரூ.300-க்கும், நகரை மற்றும் பன்னா கருவாடுகள் ரூ.200-க்கும், காரல் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் விலை உயர்வால் ஏராளமான பொதுமக்கள் தற்போது கருவாடுகளை வாங்கிச்செல்கின்றனர். இருப்பினும் கிராமப்புற மக்கள் மார்க்கெட்டுக்கு வராததால் கருவாடு விற்பனை 70 சதவீதம் குறைந்து விட்டது.

தற்போதுள்ள கருவாடு இன்னும் இருவாரங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இந்த கடைகளையும் மூடி விடுவோம். மீன்பிடி தொழில் ஆரம்பித்து மீண்டும் கருவாடு உற்பத்தி செய்யப்பட்டால் தான் மார்க்கெட்டுக்கு வரும். மீன் மற்றும் கருவாடு சார்ந்த தொழில்கள் அனைத்தும் தடை உத்தரவால் முடங்கிப்போய் அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உருக்கம்: கொரோனா வார்டில் பணியாற்றும் கர்ப்பிணி- 59 நர்சுகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் கர்ப்பிணி மற்றும் 59 நர்சுககள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் தங்களது குழந்தைகளை கட்டியணைக்க முடியாமல் தவிக்கும் உருக்கமான சம்பவம் அனைவரது இதயத்தையும் கனக்க செய்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பறித்து விட்டது. இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது தனித்து இருந்தால் தான் அந்த நோயை வெல்ல முடியும் என்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் வைத்து தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா சிறப்பு வார்டும், தனிமை வார்டும் அமைக்கப்பட்டு உள்ளன.

அங்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த பணியில் நர்சுகள் மட்டும் 60 பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது குழந்தைகள், குடும்பத்தினரை மறந்து கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற ஒரே உன்னத நோக்கத்தில் இரவும், பகலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 7 மாத கர்ப்பிணி நர்சும் ஒருவர்.

இவர்களில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் போல் தான் உள்ளனர். அதாவது அவர்கள் பாதுகாப்பு கருதி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வெவ்வேறு அறைகளில் தங்கி இருக்கின்றனர். அங்கிருந்து தங்களது பணி நேரத்தில் மட்டும் நேராக கொரோனா வார்டுக்கு சென்று பணியாற்றுகின்றனர். மற்ற நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறையிலேயே உள்ளனர்.

கட்டி அணைக்க முடியவில்லையே..

இவர்களில் திருமணம் ஆன நர்சுகளும் பலர் உள்ளனர். அவர்களது குழந்தைகள் சில நேரம் தாயை பார்க்க வேண்டும் என்று அழுது அடம்பிடிக்கின்றனர். அவர்களை தந்தை ஆஸ்பத்திரியின் பிரதான நுழைவு வாயில் அருகில் அழைத்து வருகிறார். அப்போது தாய் ஆஸ்பத்திரி உள்ளேயும், குழந்தை வெளியேயும் நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கையசைத்து பாசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அப்போது சில தாய்மார்கள் தங்களது குழந்தையை கட்டி அணைக்க முடியவில்லையே என்று ஏங்கும் உருக்கமான சம்பவம் அனைவரது இதயத்தையும் கனக்க செய்கிறது.

இந்த பாசப்போராட்டம் குறித்து நர்சுகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் யாருக்கும் பரவி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பணிபுரிந்து வருகிறோம். இதனால் வீட்டுக்கு செல்வதை தவிர்த்து விட்டோம். வெளியூர் நர்சுகள் தங்களது வீடுகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் இல்லை. குடும்பத்தை சந்திக்க ஆர்வமாக தான் உள்ளோம். ஆனால் கொரோனாவை விரட்டுவதற்கு குடும்பத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது என்று இருக்கிறோம். எங்கள் குழந்தைகளை கட்டியணைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் உள்ளது“ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வணங்க வேண்டும்

நோயாளிகளின் நலனுக்காக தொடர்ந்து வீட்டுக்கு செல்லாமல் பணிபுரியும் நர்சுகளை டாக்டர்கள், சக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த பாராட்டு மட்டும் அவர்களுக்கு போதாது, கையெடுத்து கும்பிட்டு வணங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சளி-காய்ச்சல் உள்ளதா? என வீடு, வீடாக அதிரடி ஆய்வு - சுகாதாரத்துறை அதிகாரிகள்
தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சளி, காய்ச்சல் உள்ளதா? என்று 38 ஆயிரம் பேரிடம் விவரம் சேகரித்து உள்ளனர்.

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள், மாநகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் முடக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராமசாமிபுரம் அருகே உள்ள போல்டன்புரத்தை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர், அவருடைய கணவர், மாமியார் ஆகிய 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அதிரடி ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், கள அலுவலர்கள் உள்பட 320 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இவர்கள் ராமசாமி புரம், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்று விவரங்களை சேகரித்தனர். சளி, காய்ச்சல் உள்ளதா? என்றும் பரிசோதித்து உள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 12 ஆயிரத்து 200 வீடுகளில் உள்ள 38 ஆயிரம் பேரிடம் விவரங்கள் சேகரித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 5 பேருக்கு லேசான தொண்டை வலி, சளி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து தினமும் அவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.

483 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 483 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 140 பேர் 28 நாட்கள் முழுமையாக முடித்து உள்ளனர். இதுவரை அவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் முடக்கி வைக்கப்பட்ட பகுதி மக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட் கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி 30 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் ரூ.200 மதிப்பிலான காய்கறி தொகுப்பு மற்றும் மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக சென்னை, சேலத்துக்கு 6 லட்சம் முககவசங்கள் அனுப்பி வைப்பு
திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக 6 லட்சம் முககவசங்கள் சேலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை-சென்னைக்கு சரக்கு ரெயில் சேவை நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள் உள்ளிட்ட சரக்குகளை ரெயில் மூலமாக அனுப்புவதற்கு தொழில்துறையினர் தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை கோவையில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு திருப்பூருக்கு காலை 9.20 மணிக்கு வந்தது.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் முககவசம் தயாரிக்கும் பணி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் கண்காணிப்பில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூரில் இருந்து 6 லட்சம் முககவசங்கள் நேற்று சேலத்துக்கும், சென்னைக்கும் ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளில் இந்த முககவசங்கள் வைக்கப்பட்டு ரெயில்வே ஊழியர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர். திருப்பூர் வணிக பிரிவு மேலாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

மங்கலம் பகுதி கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு - பிரதான சாலைகளுக்கும் ‘சீல்’
மங்கலம் பகுதி கொரோனா தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மங்கலம் பகுதியை சேர்ந்த 6 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் மங்கலம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கொரோனா பாதித்தவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 6 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலத்தை 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளனர்.மேலும் மங்கலம் நால்ரோடு பகுதியில் செல்லும் சாலைகளான பல்லடம்ரோடு, அவினாசி ரோடு, சோமனூர் ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய சாலைகளுக்கு சீல் வைத்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் வசித்த வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த தெருக்களில் வசித்தவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்லாத வகையிலும், மற்ற தெருக்களில் வசிப்பவர்கள் சீல் வைக்கப்பட்ட தெருக்களுக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர்( பொறுப்பு) மு.கார்த்திகேசன் தலைமையில் 5 வீரர்களும் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர், மங்கலம் பகுதியை வருவாய்த்துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்ததை தொடர்ந்து இடுவாய் ஊராட்சியில் இருந்து மங்கலம் ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலையான ஆட்டையம்பாளையம் பிரிவு மற்றும் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட எல்லைகளை கொரோனா தடுப்பு ,பாதுகாப்பு நடவடிக்கையாக இடுவாய் பொதுமக்கள் சீல் வைத்துள்ளனர்.மேலும் இதே போல இச்சிப்பட்டி ஊராட்சியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையான பெத்தாமூச்சிப்பாளையம் சாலையை இச்சிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையை பொதுமக்கள் சீல் வைத்துள்ளனர்.

ஊரடங்கிலும் விவசாய பணிகள் மும்முரம்; வெங்காய நாற்று நடவு செய்த பெண்கள்
குடிமங்கலம் பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெங்காய நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்களின் முக்கிய தேவையாக உணவு மட்டுமே உள்ளது.இதனால் உணவு உற்பத்திக்காக உழைக்கும் விவசாயிகளே உலகமெங்கும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை அனைவரும் உணர்வதற்கான வாய்ப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஊரடங்கு காரணமாக காய்கறிகளின் தேவையும் அதிகரித்து உள்ளது.

உடுமலை,குடிமங்கலம் பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஆனால் கொரோனா குறித்த அச்சத்தால் கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் விவசாயப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு பல விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயப்பணிகள் முற்றிலுமாய் முடங்கினால் வரும் காலங்களில் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பல இடங்களில் விவசாயப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக குடிமங்கலம் பகுதியில் விவசாயப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் வெங்காய நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண் தொழிலாளர்கள் வயலில் இறங்கி சின்ன வெங்காயத்தை நடவு செய்தனர். இது குறித்து சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

‘பொதுவாக விளைபொருட்கள் விலை ஏற்ற இறக்கங்கள் தான் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.ஆனால் தற்போது கொரோனா அச்சம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. பல இடங்களில் புதிதாக விவசாயப்பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது.அத்துடன் தற்போது அறுவடை செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்கள் உள்ளன.அதுமட்டுமல்லாமல் போதிய விலை கிடைக்காத நிலையும் இருக்கிறது.இதனால் வரும் மாதங்களில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வரத்து குறைந்து விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஆனால் கொளுத்தும் வெயிலில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் அணிந்து வேலை செய்வதில் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும் சளி,இருமல்,காய்ச்சல் போன்றவை இருக்கும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில்லை. பாதுகாப்பான முறையில் பணியாற்ற தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சின்ன வெங்காய சாகுபடியைப் பொறுத்தவரை எல்லா பருவத்துக்கும், எல்லா மண் வகைக்கும் ஏற்ற பயிராகவே உள்ளது. 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் சின்ன வெங்காயத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் கூடுதல் நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிகிறது.

இதனால் ஊட்டத்துக்கு வாமிர்தம், மீன்அமிலம், பஞ்சகவ்யா, கடலைப்பிண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்துகிறோம். பூச்சி தாக்குதலிலிருந்து காக்க இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் கரைசலை பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad