Type Here to Get Search Results !

டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தவர் மூலம் 9 பேருக்கு கொரோனா பரவியது

டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்தவர் மூலம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் சங்கிலி தொடரை உடைக்க அதிகாரிகள் போராடி வருகிறார்கள்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். அவரது வீடு அமைந்து உள்ள போல்டன்புரம் அருகே ராமசாமிபுரத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

டெல்லி சென்று திரும்பியவர், ராமசாமிபுரத்துக்கும், போல்டன்புரத்துக்கும் நடுவில் அமைந்து உள்ள மளிகை கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அதே கடைக்கு இறந்த மூதாட்டியும் சென்று வந்து உள்ளார். இதனால் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. பின்னர், மூதாட்டியிடம் இருந்து அவருடைய மகன், மருமகளுக்கும், அவர்களின் வீட்டின் மாடியில் வசித்து வரும் 5 பேருக்கும் பரவி உள்ளது. மருமகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் நோய் தொற்றுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றதால், அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு ஊழியருக்கும் நோய் தொற்று பரவி உள்ளது.

9 பேருக்கு பரவியது

இதன்மூலம் டெல்லி சென்று திரும்பிய ஒரு நபரிடம் இருந்து மூதாட்டி உள்பட 9 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவி உள்ளது. இந்த சங்கிலி தொடரை உடைப்பதற்கான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழையவும், உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பரிசோதனை செய்த நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் சங்கிலி தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்க டாக்டர்களும், வருவாய்த்துறை அதிகாரிகளும் போராடி வருகின்றனர்.

ஒத்துழைப்பு
full-width
அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும்போது, தவறாமல் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கடைகளின் முன்பு உள்ள தடுப்புகளை தொடுவதை தவிர்த்து இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கண், வாய், மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு வந்த உடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல் அடக்கம்

முன்னதாக, மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் மூதாட்டியின் உடல் நேற்று முன்தினம் இரவு சிதம்பரநகர் மையவாடிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையிலான சுகாதார குழுவினர் மூதாட்டியின் உடலை 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி வைத்து புதைத்தனர். குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கும் கிருமிநாசினி கலவை தூவப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் முழுஉடல் கவச உடையை அணிந்து இருந்தனர். கொரோனாவுக்கு பலியான மூதாட்டிக்கு தூத்துக்குடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கொரோனா பயம் காரணமாக அவர்கள் மூதாட்டியின் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் கண்காணிப்பு பணி தீவிரம்: கொரோனா பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரி சேகரிப்பு
தூத்துக்குடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மூதாட்டி நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதனால் 23 பேரை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தவர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருந்தவர்கள் 79 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இல்லாமல், ஒரே கடையில் பொருட்கள் வாங்கியவர்கள், ஏதேச்சையாக சந்தித்து பேசியவர்கள் போன்ற தொடர்பில் இருந்தவர்கள் 344 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்படும் அனைவரையும் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வேனின் உள்பகுதி கண்ணாடியால் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த கண்ணாடியில் ரப்பர் கைஉறை பொருத்தப்பட்டு உள்ளது. ஆய்வக நிபுணர் (டெக்னீசியன்) வேனின் முன்புறமாக கண்ணாடிக்கு அருகில் அமர்ந்து உள்ளார். பரிசோதனை செய்ய வேண்டிய நபர் வேனின் பின்புறமாக ஏறி கண்ணாடி அருகில் சென்று அமர வேண்டும்.

அப்போது, டெக்னீசியன் ரப்பர் கையுறையை அணிந்தபடி பரிசோதனை செய்ய வேண்டியவரின் சளி மாதிரிகளை சேகரிப்பார். பின்னர் அந்த மாதிரி சேகரித்த பாட்டிலை பரிசோதனை செய்யும் நபரிடம் கொடுத்து, அதனை பத்திரமாக அந்த அறையில் உள்ள பெட்டியில் வைக்க அறிவுறுத்துகிறார். அதன்படி வரிசையாக பொதுமக்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த பணிகள் நேற்று தூத்துக்குடி போல்டன்புரத்தில் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி நேற்று முன்தினம் இறந்ததால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதல்கட்டமாக சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகர நல அலுவலர் அருண்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சளி மாதிரி சேகரிப்பு பணிகளை 2 நாட்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 344 பேருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி முடிக்கப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்ட 7 இடங்களிலும் உள்ள அனைத்து மக்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்களுடன் ரெயிலில் வந்த 45 பேரை கண்டறிய நடவடிக்கை - மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடு
டெல்லியில் இருந்து விருதுநகர் திரும்பியவர்களுடன் அதே ரெயிலில் பயணம் செய்த 45 பேரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்டறிய மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தமிழகம் திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். விருதுநகர் மாவட்டத்திலும் இதுவரை 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேர் டெல்லி சென்று திரும்பியவர்களாவர்.

டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 9 பேர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் 7 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். எனினும் சுகாதாரத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 1948 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதில் 81 பேருக்கு 2 நாட்களாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 54 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ரெயில் மூலம் விருதுநகர் திரும்பியவர்களுடன் அதே ரெயில் பெட்டியில் பயணித்த 45 பேரின் பெயர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் ரெயில்வே துறையினரிடம் இருந்து பெற்றுள்ளது. அவர்கள் மாவட்டத்தின் எந்த பகுதியில் உள்ளனர் என்பது குறித்து கண்டறிய சுகாதாரத்துறை மூலமும், வருவாய்த்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிலர் அண்டை மாவட்டங்களுக்கு சென்று இருக்கலாம். அவர்களை பற்றிய விவரங்களையும் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 45 பேரையும் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவதுடன் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எடுத்து முடிப்பதற்கு சிறிது காலதாமதமானாலும் இந்த நடவடிக்கையின் மூலம் மாவட்டத்தில் வேறு எந்த பகுதியிலாவது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. எனவே இந்த நடவடிக்கையை முனைப்புடன் செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad