Type Here to Get Search Results !

தஞ்சை, நாகை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மகன், மருமகள், பேத்திக்கும் பரவியது
தஞ்சை, நாகை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மகன், மருமகள், பேத்திக்கும் பரவியது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தை சேர்ந்த 4 பேருக்கும், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 2 பேருக்கும், மேலத்திருப்பூந்துருத்தி, அம்மாப்பேட்டை, தஞ்சையை சேர்ந்த தலா ஒருவருக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒரத்தநாட்டை சேர்ந்த ஒருவரை சந்தித்த திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அம்மாப்பேட்டையை சேர்ந்தவரின் 28 வயதான மகன், 21 வயதான மருமகள், பேத்தியான 8 மாத பெண் குழந்தைக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டது.

இதே போல் அதிராம்பட்டினத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருடைய தந்தை டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

அதிராம்பட்டினம் மற்றும் அம்மாப்பேட்டையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள் ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகளில் உள்ள தெரு வாயில்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து மூடி உள்ளனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கும், வெளிப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்குள் செல்லாதவாறும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், பொரவச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 29 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டம் சிகப்பு வளையத்திற்குள் வந்தது. இந்நிலையில் திட்டச்சேரியை அடுத்த காரையூர் வீரபோகம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நாகை முதலாவது கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அக்காள்-தங்கை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் அக்காள்-தங்கை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 2 எண்ணிக்கையில் தொடங்கி நேற்று முன்தினம் வரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிலர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை தனிமை வார்டில் அனுமதித்து ரத்தம், சளி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அதில் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புளியங்குடியைச் சேர்ந்த 72 வயது முதியவரின் மகள்களும், அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் ஆவார்கள்.

அக்காள்-தங்கை உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புளியங்குடியில் நேற்று மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசாரின் வாகன சோதனையும் கடுமையாக்கப்பட்டு உள்ளது. நகராட்சி, போலீசார் இணைந்து இரவு முதலே அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளன.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் குணம் அடைந்தனர் - 38 பேருக்கு தீவிர சிகிச்சை
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் குணம் அடைந்தனர். 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் முதல் கட்டமாக 14 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களின் ரத்த பரிசோதனை 2 முறை எடுக்கப்பட்டது. இதில் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட்டு குணமடைந்தது தெரியவந்தது. இதேபோல் 2-வது கட்ட பரிசோதனையில் மேலும் 4 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் பாதுகாப்பு கருதி 2 வாரங்களுக்கு மத்திய பல்கலைக்கழகத்தில் செயல்படும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இங்கு 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்ததகவலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad