Type Here to Get Search Results !

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு; சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 46 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்த செவிலியர், தூய்மைபணியாளர் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த 68 வயது முதியவர் என 3 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனால் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று புதிதாக நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 31 வயது லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசம் சென்று திரும்பிய இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 30 வயது நிரம்பிய வாலிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறையினர் உறுதி செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 729 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் 26 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 3,230 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தவும், ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பம்பாளையம் பகுதிக்கு ‘சீல்’ வைத்துள்ள போலீசார் அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகின்றனர்.

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி மாவட்டம் - நெல்லை, தென்காசியிலும் கொரோனா பரவும் வேகம் குறைகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 229 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில் மொத்தம் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அவர்கள் தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கண்காணிப்பு

கடந்த 20-ந்தேதி பசுவந்தனையை சேர்ந்த ஒரு பெண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பசுவந்தனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் தொடர்ச்சியாக சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

ஆரஞ்சு மண்டலம்

கடந்த 8 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. 14 நாட்கள் தொடர்ச்சியாக புதிய தொற்று ஏற்படவில்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக தூத்துக்குடி மாவட்டம் மாறும். அதன்படி ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி தூத்துக்குடி மாவட்டம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 12-ந்தேதிக்கு பிறகு கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், டவுன், பாளையங்கோட்டை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவியது. மாவட்டத்தில் மொத்தம் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இதில் 53 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் தினமும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பார்த்தால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62-ல் இருந்து 63 ஆக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 5 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தென்காசி

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 35 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 25-ந்தேதி புளியங்குடியில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த 3 நாட்களாக அங்கு புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார், நகரசபை அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நோயின் தாக்கம் குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 26 பேர் வீடு திரும்பினர்
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 53 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில் நேற்றுமுன்தினம் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 27 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மாங்காட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் உறுதியானது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் அவரது கடைக்கு வந்து சென்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள 6 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு மாங்காடு பேரூராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோயம்பேடு மற்றும் சென்னைக்கு சென்று வருபவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பதால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயில்களை மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சென்னையில் இருந்து மாங்காடு மற்றும் குன்றத்தூர் வழியாக வரும் எல்லைகளான மாங்காடு, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், குன்றத்தூர் நான்கு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உள்பட 5 பேர் குணமடைந்தனர்
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உள்பட 5 பேர் குணமடைந்ததால் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமானதும் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

திருச்சி அரசு மருத்துவமனையில், மொத்தம் 51 பேர் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஏற்கனவே 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா வார்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் குணமடைந்து நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனை டீன் வனிதா, தலைமை மருத்துவ அதிகாரி ஏகநாதன் மற்றும் டாக்டர்கள் பழங்கள் உள்ளிட்டவைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதற்காக கடுமையாக உழைத்த மருத்துவ ஊழியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு தெரிவித்தார்.

14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

6-வது நாளாக வைரஸ் பாதிப்பு இல்லை

திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அறிக்கை வரவில்லை. எல்லாமே நெகட்டிவ் ஆகவே உள்ளது. இதனால், திருச்சியை விட்டு கொரோனா படிப்படியாக விலகி வருகிறது என்று அரசு டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து ஒரு மாதம் வரை இருக்கலாம் என்றும், எனவே, இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக முக கவசங்கள் அணிவதையும், அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை கழுவுவதையும் பொதுமக்கள் தவிர்க்க கூடாது என்றும், பாதுகாப்பை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad