Type Here to Get Search Results !

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி - தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக் கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் இறந்தார். இதனால் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் பெருந்துறையை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந் தார். அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

full-width இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக நேற்று மாலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான முதல்நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 9 ஆக இருந்தது. நேற்று ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்ததால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 10 ஆக உயர்ந்தது. நேற்று தமிழகத்தில் 58 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 51 ஆயிரத்து 996 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 165 பேர் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 842 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக் கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 1,094 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

தமிழகத்தில் நேற்று பாதித்த 58 பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேரும், நாகப்பட்டினத்தில் 12 பேரும், கோவையில் 11 பேரும், சென்னையில் 10 பேரும், திருச்சியில் 3 பேரும், நீலகிரியில் 2 பேரும், திண்டுக் கல், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளதா? குமரியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு
மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளதா? என குமரியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்த வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த 2 பேர், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த 2 பேர், மணிகட்டி பொட்டலைச் சேர்ந்த சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் ஆகியோருக்கு தான் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் 5 பேருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் மூலமாக அவருடைய 88 வயது பாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை இதற்கு மேல் அதிகரித்துவிடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், போலீசார் என அனைத்து துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அப்படி இருந்தும் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் குடும்பத்தினர் 4 பேருக்கும், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினர் 4 பேர், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவரின் மனைவி என மேலும் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கை உள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியில் நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் மதுசூதனன் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், கோட்டாட்சியர் மயில், நகர்நல அதிகாரி கின்சால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டைச் சுற்றிலும் 2 ஆயிரம் வீடுகள் சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி தடுப்புகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வீடு, வீடாக சென்று மேற்கண்ட பிரச்சினை உள்ளவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே வந்து அரசு ஆஸ்பத்திரிகளில் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கும்பகோணத்தில் செல்போன் கோபுரத்தில் திடீர் ‘தீ’ - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம்
கும்பகோணத்தில், செல்போன் கோபுரத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின் சாதனங்கள் சேதம் அடைந்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் ஒலிமுகமது. இவருக்கு சொந்தமான 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் உள்ளது.

இதில் உள்ள அறைகளில் 30-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி மாறன் தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் கொழுந்து விட்டு எறிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த செல்போன் கோபுரம் வழியாக 5 ஆயிரம் செல்போன்களுக்கு இணைப்புகளை அளிக்கும் எந்திரங்கள் சேதமடைந்தது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், குளிர்சாதன எந்திரங்களில் ஏற்பட்ட அதிக மின் அழுத்தம்தான் தீ விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad