கான்பூர்,
கான்பூரில் நேற்று நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி, விராட் கோலி தலமையின் கீழ் தொடர்ச்சியாக 7 தொடர்களை வென்று அசத்தியிருக்கிறது.
இந்த வெற்றிக்கு பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. பும்ரா, யுசுவேந்திர சஹால் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. பவுலர்களை அவர்களின் விருப்பப்படியே பந்துவீச முடிவு எடுத்தேன். பனிதுளி அதிகமாக இருந்ததால் நான் அமைதியாக இருந்தேன். பனிதுளியால் பந்துவீசுவது என்பது மிகவும் சவாலானது.
இந்திய அணி எப்போதுமே, எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து மிகவும் சிறப்பாக விளையாடியது. ஒவ்வொரு ஆட்டத்திலும் கடும் போட்டியை அளித்து சவால் கொடுத்தது. இதனால் நாங்கள் எல்லா ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவேண்டிய நிலையை ஏற்படுத்தினர். இந்த தொடர் மிகவும் சவாலாக அமைந்தது. நியூசிலாந்து வீரர்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment
0 Comments