நடிகை சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதுவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு பரபரப்பு சமந்தாவை தொற்றிக்கொண்டிருக்கிறது. அரசியலில் குதிக்க திட்டமிட்டிருக்கிறாராம் சமந்தா. முதலில் இதுவொரு கிசுகிசுவாக இருக்கும் என்று எண்ணிய நிலையில் அதில் உண்மை இருப்பதாகவே அடுத்தடுத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி கூறப்படுவதாவது: திருமணத்துக்கு பிறகு நடிப்பேன் என்று ஏற்கனவே சமந்தா விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கு நாக சைதன்யா குடும்பத்தினரும் ஓ.கே சொல்லியிருக்கின்றனர்.
திடீரென்று சமந்தா அரசியலில் குதிக்க உள்ளார் என்ற பரபரப்பு சமீபகாலமாக உலா வருகிறது. சமந்தா ஏற்கனவே நற்பணி அமைப்பு ஒன்றை நிறுவி ஆதரவற்றவர்களுக்கு உதவி வருகிறார் என்றாலும் அப்போதுகூட இதுபோன்ற ஒரு தகவல் பரவவில்லை. தெலங்கானாவில் வரும் 2019ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் சமந்தா போட்டியிட உள்ளாராம். அதற்கு அடித்தளம் அமைக்கும் வேலைகளை நாகார்ஜூனா குடும்பம் இப்போதே செய்து வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள செகந்தராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிட வாய்ப்புள்ளது. செகந்தராபாத் தொகுதி கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதி.
சமந்தாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே அவருக்கு அத்தொகுதி சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. சமந்தா உண்மையிலேயே அரசியலில் நுழைந்தால் அவருக்கு தேர்தல் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்)கட்சி தலைவர்களுடன் நீண்ட காலமாகவே சமந்தா இணக்கமான நட்பு பாராட்டி வருகிறார். அக்கட்சி அமைச்சர்கள் பங்கேற்ற கைத்தறி விழாக்களில் பங்கேற்றிருக்கிறார். இதனால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருக்காது. விரைவில் அக்கட்சியில் சமந்தா சேர்வதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
Post a Comment
0 Comments