வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்: ஐ.நா பொதுச்செயலாளர் மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம்
நியூயார்க்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவிலிருந்து புறப்பட்ட ஏவுகணை 3,700 கி.மீ. தூரம் பயணித்து ஜப்பான் நாட்டின் ஹாக்கேடோ தீவை தாண்டி பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. அமெரிக்காவின் வாங்க் தீவை தாக்கும் வகையில் வடகொரியா நடத்திய 2வது ஏவுகணை சோதனை இது.
வடகொரியாவின் செயல்பாட்டுக்கு அதன் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. தென்கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து வடகொரியாவின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. வடகொரியாவின் சோதனைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குட்ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ப்ரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய தனது எல்லையில் அமெரிக்க உதவியுடன் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா சபை விரைவில் கூடவுள்ளது. வடகொரியாவின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இதுவரை ஐ.நா சபை 8 முறை அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதால் கொரிய தீபகர்ப்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.