மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் சேவை பிரதமர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
புதுடெல்லி: மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவையை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. வருகிற 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது இந்த சேவையை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 508 கிமீ தொலைவு கொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கான செலவில் ரூ.88 ஆயிரம் கோடியை மிகவும் குறைவான வட்டியாக 0.01 சதவீதத்தில் வழங்க முன் வந்துள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர்.
2022-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முடிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் பாய்ந்து செல்லும். புல்லட் ரெயிலை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். சுமார் 300 ரெயில்வே ஊழியர்கள் ஜப்பானில் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.