புதுடெல்லி: மத்திய அமைச்சரவை ஞாயிறன்று மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்லும் முன், ஞாயிறன்று மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் குடியரசுத் தலைவர் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டிருப்பதால், அவர் டெல்லி திரும்பிய பின்னரே மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே புதிய அமைச்சர்கள் ஞாயிறன்று பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியானது.
இதனை உறுதிபடுத்தும் வகையில் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, மனித வளத்துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே பதவி விலகியுள்ளனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினர். நீர்வளத்துறை காபினெட் அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உமாபாரதி, மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஃபகான் குளஸ்தே ஆகியோரும் பதவி விலக முன் வந்தனர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வசம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் பாதுகாப்புத்துறைக்கு தனியாக காபினெட் அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. நிதின் கட்கரி ரயில்வே அமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment
0 Comments