பஞ்ச்குலா: அரியானா சாமியார் குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இது நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையானது. 7 ஆண்டாக இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய குர்மீத்தை, கடந்த வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அரியானா காவல் துறையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசாரிடம் குர்மீத்தை சிறைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
குர்மீத்தை கைது செய்த ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார், அங்கிருந்து அவரை ஸ்கார்பியோ காரில் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், சிறைக்கு வெளியே குவிந்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் குழப்பம் ஏற்பட்டது.போலீசார் குறைந்த அளவே இருந்ததால் வன்முறையை அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
குர்மீத்தின் பாதுகாப்பில் ஈடுபட்ட இசட் பிளஸ் பிரிவு கமாண்டோ வீரர்கள், அவரை காரில் ஏற்ற முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட ஐஜி ஒருவர், அவர்களை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், கமாண்டோ வீரர் ஒருவர் அவரையும் தாக்க முயன்றார். துப்பாக்கியால் சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த களேபரத்துக்கு இடையே, குர்மீத்தை காரில் ஏற்றிக் கொண்ட ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கிருந்து பறந்தனர். ஆனால், 7 கமாண்டோ வீரர்கள், செல்போன்களை செயலிழக்க பயன்படுத்தப்படும் ‘ஜாமர்’ வாகனத்தில், போலீசாரை துரத்தி சென்றனர். ஒரு இடத்தில் அந்த காரை வழிமறித்து நிறுத்தினர். அங்கு அவர்கள் குர்மீத்தை மீட்க முயன்றனர். ரமேஷ் மற்றும் போலீசார் அதை தடுக்க முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு நடக்கும் நிலைமை உருவானது. அப்போது கமாண்டோ வீரர் ஒருவர், ‘எங்கள் தந்தையை அழைத்துச் செல்ல விட மாட்டோம். ஜாமர் வண்டியை ஸ்டார்ட் செய்து, இந்த போலீஸ்காரன்களை ஏற்றிக் கொல்’ என்று சக கமாண்டோ வீரர்களுக்கு ஆவேசமாக உத்தரவிட்டார்.
உடனே, ஜாமர் வாகனம் வேகமாக வந்தது. போலீசார் தங்கள் வாகனத்தை பின்நோக்கி எடுத்துச் சென்று மோதலை தவிர்த்தனர். பின்னர், காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பி மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தயாராக நின்றிருந்த ஹெலிகாப்டரில் குர்மீத்தை ஏற்றிச் சென்று, ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைத்தனர்.
கமாண்டோ வீரர்களின் இந்த தாக்குதல் குறித்து ரமேஷ் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், 7 கமாண்டோ வீரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Post a Comment
0 Comments