புதிய உலக போருக்கு வழி வகுக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
சியோல்:
‘கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத போர் பகுதியாக மாற்றி, உலக போருக்கு வழி வகுக்க வேண்டா்ம்’ என்று அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி கடந்த 4ம் தேதி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் அணு ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால், வடகொரியாவை மிரட்டும் வகையில் கொரிய தீபகற்ப பகுதியி்ல் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினமும் அமெரிக்காவின் அதிநவீன பி-1பி ரக போர் விமானங்கள், கொரிய எல்லையில் தாழ்வாக பறந்தன. இவை 900 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை. அமெரிக்காவின் இந்த போர் ஒத்திகை, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியாவில் வெளியாகும் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘வடகொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான இந்த போர் ஒத்திகை அத்துமீறல், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத போர் முனையமாக மாறும் நிலைமைக்கு தள்ளிவிடும். கூட்டு பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் இது போன்ற சூழ்ச்சியை அணு ஆயுத போரை தூண்டும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. தவறான கணிப்பு அல்லது சிறு பிழை ஏற்பட்டாலும் அது அணு ஆயுத போரின் துவக்கமாக அமைந்துவிடும். தவிர்க்க முடியாத மற்றொரு உலக போருக்கும் இது வழிவகுத்துவிடும்’ என்று கூறப்பட்டுள்ளது.