டுவிட்டரிலிருந்து குஷ்பு திடீர் விலகல்
நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த குஷ்பு அரசியல் பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார். அரசியல் நிகழ்வுகள், தனிப்பட்ட மற்றும் மத தாக்குதல் என எந்தவொரு விஷயமாக இருந்தாலும் துணிச்சலாக கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தீவிரம் காட்டி வந்த குஷ்பு, திடீரென்று அதிலிருந்து விலகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நண்பர்களே டுவிட்டரிலிருந்து சில காலம் விலகியிருக்க முடிவு செய்திருக்கிறேன். இனி நிறைய புத்தகங்கள் படிப்பேன்.
டுவிட்டர் பக்கத்துக்கு அடிமையாகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு... ஆனால் விரைவில் மீண்டும் இதற்கு திரும்பி வருவேன். என் மீது இதுவரை அன்பு காட்டிய உங்களுக்கு என் நன்றி. உங்கள் ஆதரவுதான் எனக்கு பெரிய பலமாக இருந்தது. டுவிட்டர் பக்கத்தில் இல்லாவிட்டாலும் என் மீதான ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன். நான் என்ன செய்கிறேன். எங்கு இருக்கிறேன் என என் வாழ்வில் நடக்கும் விவரங்கள் உங்களிடம் வந்து சேரும்.
ஏனென்றால் எனது வாழ்க்கை திறந்த புத்தகம். உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேர்மையாக இருங்கள். இணைய தள பக்கத்தை நாட்டை கட்டமைக்க பயன்படுத்துங்கள் பிரிவினைக்காக அல்ல... வன்மங்களை விரட்டியடியுங்கள். அமைதியும், மகிழ்ச்சியும் பரவச் செய்யுங்கள். இவ்வாறு டுவிட்டர் பக்கத்திலிருந்து விலகுவதுபற்றி குஷ்பு தெரிவித்திருக்கிறார்.