வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம்: அருண் ஜெட்லி தகவல்
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அருண்ஜெட்லி கூறியதாவது: சுவிட்சர்லாந்தின் HSBC, வங்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மொத்தம், 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக 72 புகார்கள் பெறப்பட்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அமலாக்க துறை உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளும் உதவி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் வேளையில் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.