வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை நடத்திய அமெரிக்கா
கொரிய தீப கற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை, பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்த சோதனை மார்ஷல் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையை அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.