உலக சினிமாதான் எனது குறி : ராதிகா ஆப்தே திடீர் முடிவு
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் என சகட்டுமேனிக்கு எந்த மொழி படம் வந்தாலும் அதை ஏற்று நடிக்கும் ராதிகா ஆப்தே குறும்படங்களையும் விட்டு வைக்கவில்லை. தற்போது ‘தி ஆஷ்ரம்’ ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, தீபிகாபடுகோன் நடிக்கும் படங்கள் ஹாலிவுட் பட நிறுவனங்கள் தயாரிப்பதாகும். ராதிகா ஆப்தே நடிக்கும் ஆங்கில படங்கள் பெரிய நிறுவனங்களின் படம் இல்லை. ஆனாலும் கதைக்கு ஏற்ப நிர்வாண காட்சி, டாப்லெஸ் காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவதில்லை.
‘ஹாலிவுட் படங்களில் நடிப்பதுதான் உங்கள் எண்ணமா?’ என்று ராதிகா ஆப்தேவிடம் கேட்டபோது,’ஹாலிவுட், பிரிட்டிஷ் படங்கள் மட்டுமல்ல உலக சினிமாவில் தனி இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதற்காக என்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். வாய்ப்புகளும் என்னை நோக்கி வரத் தொடங்கி இருக்கிறது.
கமர்ஷியல் படங்கள், கலைப்படங்கள் இரண்டும் நான் செய்திருக்கிறேன். இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. தற்போது பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. சவாலான வேடங்கள் எனக்கு தரப்படுகின்றன. அதுபோன்ற வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எனது கவனம் முழுவதையும் திரைப்படங்கள் மீது மட்டுமே திருப்பி இருக்கிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.