வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்ற வீரர் வரிசையில் தோனியை முந்திய ரெய்னா, புதிய சாதனை படைத்தார். தவிர, கடைசி கட்ட ஓவர்களை எப்படி வீச வேண்டும் என்ற விஷயத்திலும் ரெய்னா அசத்தி விட்டார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் இடம் பெற்ற சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு சூதாட்டம் காரணமாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து சென்னை அணிக்காக விளையாடிய தோனி, ரெய்னா உள்ளிட்டோர் தனித்தனியாக பிரிந்து விட்டனர். தற்போதைய 9வது சீசனில் புனே (தோனி), குஜராத் (ரெய்னா) அணிகளுக்கு கேப்டன்களாக களமிறங்கியுள்ளனர்.
இதில் சென்னை அணிக்காக ஒரு போட்டியை கூட தவற விடாமல், அனைத்து போட்டியிலும் பங்கேற்றவர் ரெய்னா. தவிர, பிரிமியர் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவருக்குத் தான் முதலிடம் (134 போட்டி, 3743 ரன்).இதனிடையே, இம்முறை குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரிமியர் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற அணியில் இருந்த வீரர் என்ற வரிசையில் ரெய்னா, தோனியை முந்தி புதிய சாதனை படைத்தார்.
அதாவது சென்னை (79 வெற்றி), குஜராத் (2 வெற்றி) என, மொத்தம் 81 வெற்றி பெற்ற அணியில் ரெய்னா இடம் பெற்றுள்ளார். சென்னை (78), புனே (1) அணி என, தோனி இடம் பெற்ற அணிகள் 79 வெற்றி தான் பெற்றுள்ளது.
தவிர, குஜராத் அணிக்கு எதிராக ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 111/1 என, வலுவாக இருந்தது. இதன் பின் போகப் போக ரன் வேகம் குறைந்தது.கடைசி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசும் பால்க்னர், பிரவீண் குமார் என, இரு இருந்த போதும், ஜடேஜா, டாம்பே என, சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார் ரெய்னா. இதனால் புனே அணி விக்கெட்டுகளை இழந்து, ரன் குவிக்க முடியாமல் போனது.
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில்
பந்து சற்று தேய்வடைந்து விட்டால், நன்றாக பிடித்து சுழற்ற வசதியாக இருக்கும். தவிர, சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை எதிர்கொள்வதும், பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால், நீ பந்து வீசுகிறாயா? என ரெய்னா கேட்டதும், உடனே சரி என்றேன்,என்றார்.
உண்மையில் வெற்றி விஷயத்தில் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் பவுலர்களை எப்படி பயன்படுத்துவது என்பதிலும் தோனியை மிஞ்சி விட்டார் ரெய்னா
Post a Comment
0 Comments