Type Here to Get Search Results !

திருந்த வேண்டியது அழகிரிதான் திமுக அல்ல: அழகிரி கமெண்டுக்கு திமுக பதிலடி

சென்னை: திமுக குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, திருந்த வேண்டியது அழகிரிதான் என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக பலம் வாய்ந்தவராக இருந்தவர் அழகிரி. மு.க. ஸ்டாலினுடனா ன கருத்து வேறுபாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்த, அதைத்தொடர்ந்து திமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டனர். திமுகவிற்கு எதிராக பலத்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்துவந்த அழகிரி சில மாதங்களாக அமைதி காத்துவந்தார். இந்நிலையில் நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்த அழகிரியை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். விரைவில் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு குறித்து கேள்விகளை எழுப்பினர். “திமு கவில் மீண்டும் சேருவீர்களா“ என்ற கேட்டபோது, “ தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர். எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றவர் தொடர்ந்து, “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது“ என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடினார். மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு, “ ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது“ என்றவர் அதைத்தொடர்ந்து “முகவரி இல்லாத ஆளைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள்“ என கடுகடுத்த பதிலோடு அங்கிருந்து கிளம்பினார். அழகிரியின் கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அழகிரியின் கமெண்ட்டுக்கு பதிலடியாக “ அழகிரிதான் திமுகவை விமர்சித்து தனக்கு முகவரி தேடிக்கொள்கிறார். அழகிரியை சேர்த்துக்கொள்ளும் அளவு திமுக ஒன்றும் வலிமை குறைந்த கட்சியல்ல. என்றார். மேலும் திருந்தவேண்டியது அழகிரிதானே தவிர திமுக அல்ல“ என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad