Type Here to Get Search Results !

உயிருக்கு போராடும் குழந்தைக்கு உதவி செய்த விஜய், சிவகார்த்திகேயன்

எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு வயதேயான குழந்தைக்கு சிகிச்சைக்கு தேவையான நிதிஉதவிகளை, நடிகர்கள் விஜய்யும், சிவகார்த்திகேயனும் வழங்கியுள்ளனர். பாலா என்ற ஒரு வயது குழந்தைக்கு எலும்பு சம்பந்தமான நோய் இருப்பதாகவும், இதன் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், யாராவது உதவி செய்யுங்கள்... என அந்த குழந்தையின் போட்டோ மற்றும் முகவரியுடன் பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த விஷயம் அறிந்த நடிகர் விஜய், முதல் ஆளாக அந்த குழந்தைக்கு ரூ.2 லட்சத்திற்கான செக் ஒன்றை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதேப்போல் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த விஷயம் அறிந்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பாலாவின் தந்தை முருகனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும், 6 மாதத்தில் ஒரு குழந்தையும் இறந்துவிட்டன. இது எனக்கு மூன்றாவது குழந்தை. குழந்தை பிறந்து ஒரு வருடம் நன்றாக தான் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் காய்ச்சல் வந்தது. மருத்துவமனைக்கு சென்று காண்பித்தோம். சிகிச்சை அளித்தனர், ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக கூறினர்.


குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமானால் வாரம் ஒருமுறை ரூ.20 ஆயிரத்திற்கு ஊசி போட வேண்டும் என்றனர். நாங்களும் வாரம் ரூ.20 ஆயிரம் செலவு செய்தோம். ஆனால் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வந்தது. பிறகு குழந்தையை பரிசோதனை செய்ததில் அவருக்கு, Severe Combined Immuno Deficiency Syndrome என்ற நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக Bone Marrow Transplantation சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் காண்பித்தபோது ரூ.50 லட்சம் செலவாகும் என்று கூறினர். பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், இந்த ஆபரேஷனுக்கு ரூ.20 லட்சம் ஆகும் என்று கூறினர். அதன்படி இங்கு சேர்த்தோம்.


சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி


ஆனால் என்னிடம் இவ்வளவு பணம் கிடையாது. எனது நண்பர் ஒருவர் தான் இன்டர்நெட்டில் இந்த தகவலை சொல்லி உதவி பெறலாம் என்றார். அதன்படி நாங்கள் பேஸ்புக், டுவிட்டரில் இந்த செய்தியை வௌியிட்டோம். நிறைய என்ன பிரச்னை என்று கூறி தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள். நாங்கள் இந்த செய்தியை டுவிட்டரில் வௌியிட்டபோது நடிகர் சிவகார்த்திகேயன் தான் முதலில் ரீ-டுவிட் செய்தார். தொடர்ந்து ஜெயம் ரவி உள்ளிட்ட பிற நடிகர்களும் ரீ-டுவிட் செய்தனர். அத்தோடு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.


விஜய் ரூ.2 லட்சம் நிதியுதவி


இந்த செய்தியை பார்த்துவிட்டு நடிகர் விஜய்யும் உதவி செய்தார். அவரது தனது அறிக்கட்டளை மூலம் ரூ.2 லட்சம் வழங்கினார். இதை விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் கொண்டு கொடுத்தார். விஜய் தவிர துபாயை சேர்ந்த ஒருவர் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுவரை ரூ.4 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இன்னும் ரூ.16 லட்சம் தேவைப்படுகிறது.


என் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி பிரார்த்தனை மிகவும் முக்கியம். என் குழந்தை நலம் பெற வேண்டி எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.


இவ்வாறு பாலாவின் தந்தை முருகன் கூறினார்.


குழந்தை பாலாவுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்... 91-9094386836 (முருகன்)


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad