Type Here to Get Search Results !

முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களுடன் காசி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் போலீசார் கைப்பற்றி விசாரணை; வாலிபரை கடத்தி கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களுடன் காசி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் போலீசார் கைப்பற்றி விசாரணை
பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைதான காசி முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களுடன் நெருக்க மாக இருந்த வீடியோக் களை போலீசார் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26), கோழிக்கடை நடத்தி வந்தார். இவர் ஏராளமான பெண்களுடன் பழகி ஆபாச படம் எடுத்துள்ளார். அந்த படங்களை காட்டி மிரட்டி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் சிறுமி உள்பட 3 பெண்கள் தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காசிக்கு உடந்தையாக இருந்த, அவரது நண்பரான நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு நண்பர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாது காசி இளம்பெண்களுடன் பழகி அவர்களின் தாயாரையும் தனது வலையில் வீழ்த்தியது தெரியவந்தது.

இதற்கிடையே காசியின் லேப்-டாப் மற்றும் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த லேப்-டாப்பில் காசி ஏராளமான பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது முதலில் தெரியவந்தது. அந்த வீடியோக்களில் இருந்த பெண்களின் விவரம் தெரியாமல் இருந்தது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காசியின் லேப்-டாப்பில் உள்ள வீடியோக்களில் குடும்ப பெண்கள் பலரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்களும் அடங்குவர்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவருடன் காசி நெருக்கமாக உள்ள காட்சிகளும் இருக்கின்றன. இது தவிர பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியுடனும் நெருக்கமாக இருக்கும் வீடியோவும் இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு வீடியோக்கள் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் காசி ஈடுபடவில்லை. மற்றபடி அவர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஒருசிலர் காசியால் மிரட்டப்பட்டு இருந்தாலும் குடும்ப மானம் போய் விடும் என பயந்து புகார் அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. குமரி மட்டுமின்றி கோவை, சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த பணக்கார வீட்டு பெண்களுடன் காசி நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் லேப்-டாப்பில் இருப்பதாக தெரிகிறது.

காசி லேப்-டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் காசியின் நண்பர்கள் சிலரும் உள்ளனர். அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீசார் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

அப்படி அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் போது காசி விவகாரம் குமரி மாவட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி முடிவு காசியுடன் நெருங்கி பழகியவர்களை அச்சமடைய செய்துள்ளது.

வாலிபரை கடத்தி கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடலூர் முதுநகர் பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக இருதரப்பினரிடையே அடிதடி பிரச்சினை ஏற்பட்டது. இதை வீடியோ எடுத்து டிக்-டாக் செயலி மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தியதாக கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தை சேர்ந்த ஜிங்கி ஜெய்வின் ஜோசப் (வயது 19) என்ற வாலிபரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து குடிகாடு உப்பனாற்று பகுதியில் புதைத்தது.

இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரிய காரைக்காடு வள்ளுவர் தெருவைச் சேர்ந்த பிரபா என்கிற பிரபாகரன் (27), கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவைச் சேர்ந்த விஜய் (21), நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆசை என்கிற மணியரசன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் 3 பேரிடமும், சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad