Type Here to Get Search Results !

கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா பரிசோதனை; கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 10 ஊர்களில் ஊரடங்கு தளர்வு இல்லை - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 7 பேருக்கு கொரோனா பரிசோதனை - தனிமைப்படுத்தி கலெக்டர் நடவடிக்கை
ராமநாதபுரம் நகரில் கொரோனா தொற்று நடமாடும் பரிசோதனை மையத்தினை கலெக்டர் வீரராகவராவ், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன்பின்னர் நோய்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 566 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 21 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 545 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. ஒரு பரிசோதனை முடிவு நிலுவையில் உள்ளது.

இதுதவிர, நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட 76 பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு இனி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலேயே பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். நோய்்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் வரவோ, அந்த பகுதிகளுக்குள் யாரும் செல்லவோ கூடாது. தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு பெற்ற பகுதி கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது. மற்ற எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது. திறக்கப்படும் கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம், கைகழுவும் முறையை கடைபிடித்து நோய் பரவாமல் தற்காத்து கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 7 பேர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி்களை கடந்து கள்ளத்தனமாக இதுவரை 311 பேர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 10 ஊர்களில் ஊரடங்கு தளர்வு இல்லை: சென்னையில் இருந்து வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 10 ஊர்களுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வு இல்லை. மேலும் சென்னையில் இருந்து வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கூறினார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அதிராம்பட்டினம், திருவையாறு, பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், நெய்வாசல், சேதுபாவாசத்திரம், கபிஸ்தலம், வல்லம், தஞ்சை சுந்தரம் நகர் உள்ளிட்ட 10 ஊர்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு அங்கு முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களின் படி ஊரடங்கிலிருந்து சில தளர்வுகள் தளர்த்தப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்த 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளது.

குணமடைந்து வீட்டுக்கு செல்வோர் அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார்கள்.

முன்னதாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சீல்வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

சீல்வைக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அச்சகங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்படும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். (பதிவுத்துறை அலுவலகங்கள் உட்பட) மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும். அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி நாளை (புதன்கிழமை) முதல் செயல்பட அனுமதிக்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் எந்தெந்த கடைகளை திறக்க அனுமதி? - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விளக்கம்
ஊரடங்கு காலத்தில் தென்காசி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் பிற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி இல்லை.

குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்கும் பெரிய நகை மற்றும் ஜவுளி நிறுவனங்கள், அனைத்து சலூன் கடைகள், அழகு நிலையங்கள், அனைத்து மால்கள், வணிக வளாகங்களில் இயங்கும் நிறுவனங்கள், கடைகள், அனைத்து டீக்கடைகள், பொது நுழைவு வாயிலுடன் செயல்பட்டு வரும் குழு கடைகள்.

கீழ்க்கண்ட கடைகள் சில கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளாசிங் சென்டர்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டும், 50 சதவீத கணினி கொண்டும் நடத்தலாம். அனைத்து தனி கடைகள், இரும்பு கடைகள், கட்டுமான பொருட்கள் கடைகள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மொபைல் போன், கணினி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார்கள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனி கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தொழில் நிறுவனங்களும், கடைகளும், அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றி, போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும், அரசால் வெளியிடப்பட்டு உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 3 முறை கிருமி நாசினி பயன்படுத்தி கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்து இருக்க வேண்டும். கடையில் வேலை செய்பவர்களின் பட்டியல்களை நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்து சுய சான்று அளிக்க வேண்டும். அதை கடைகளின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் கடைக்கு வருபவர்களின் பதிவேடுகளை கடைக்காரர்கள் தயார் செய்து, அதை பராமரிக்க வேண்டும்.

பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நாகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும்போது, அனுமதி அட்டையை கொண்டு வர வேண்டும். கொரோனா நோய் தெற்றை தடுக்க சமூக இடைவெளியை அமல்படுத்துவதில் குறைகள் இருப்பின் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும், அவசர கட்டுப்பாட்டு அறையை 04633 290548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad