Type Here to Get Search Results !

கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமல்;கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் நீடிப்பது ஏன்? புதுச்சேரியில் 44 மருத்துவர்கள் தனிமை

கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் நீடிப்பது ஏன்? பீலா ராஜேஷ் விளக்கம்
தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரியில் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டும், அம்மாவட்டம் பச்சை மண்டலத்தில் நீடிப்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், புட்டபர்த்தியில் இருந்து திரும்பியவர் சேலம் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதால், அவர் சேலம் மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று புதிதாக 231 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1257 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 158 பேர் ஆண், 72 பேர் பெண், ஒருவர் திருநங்கை ஆவர். சென்னையைச் சேர்ந்த திருநங்கைக்கு வயது 46. கோயம்பேடு மார்க்கெட்டில் அவருக்கு தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டிக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் 127 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமல்
கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம் மற்றும் ரோஸ் வண்ணங்களில் அனுமதி அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர முடியும். மூன்று வண்ண அனுமதி அட்டைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த முடியாது. எனவே தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்காக கடைப்பிடிக்கப்படும். எனவே தவிர்க்கமுடியாத காரணங்களை தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இன்று எந்த அட்டைக்கும் அனுமதி கிடையாது. குடிநீர், பால் மற்றும் மருத்துவ தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தடை காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்திலும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வாரத்திற்கு 2 நாட்கள் வீதம் 6 நாட்கள் மட்டும் வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எந்த அட்டைக்கும் அனுமதியும் கிடையாது. அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

முழு ஒத்துழைப்பு

இதில் அவசர மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேற்காணும் விதிகளில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவர்கள் தனிமை
புதுச்சேரியில் கொரோனா தொற்று இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய விதிகளின்படி மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜிப்மர் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad