Type Here to Get Search Results !

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த திண்டுக்கல் தொழிலாளர்கள் 3 பேர் உள்பட ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த திண்டுக்கல் தொழிலாளர்கள் 3 பேர் உள்பட ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த திண்டுக்கல் தொழிலாளர்கள் 3 பேர் உள்பட ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுடெல்லி மற்றும் வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 91 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பெண்கள், முதியவர்கள் உள்பட இதுவரை 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் இறந்து விட்டார். மீதமுள்ள 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசோதனை

இதற்கிடையே சென்னை உள்பட வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து 46 பேர் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு திரும்பினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் சித்தரேவு அருகேயுள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

இந்த 3 பேரும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்த தொழிலாளர்கள் ஆவர். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மூலம் அந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையே ஒட்டுப்பட்டியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் வெளியே செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆனது. இவர்களில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டும் இறந்து விட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad