Type Here to Get Search Results !

அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் - எடப்பாடி பழனிசாமி; ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் - எடப்பாடி பழனிசாமி
சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை மண்டல போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஆபாஷ்குமார், அபய்குமார் சிங், மகேஷ்குமார் அகர்வால், அம்ரேஷ் புஜாரி மற்றும் மாநகராட்சி களப்பணிக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

சென்னை மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக, கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடக்கப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தவுடன் அதை தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

சென்னை அதிக மக்கள் நிறைந்த நகரம். கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு இதுதான் காரணம். குறுகலான தெரு, அதிகமான மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் எளிதாக நோய் ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவிவிடுகிறது. அதோடு, பொதுக் கழிவறைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால், தொற்று எளிதாக பரவுகிறது.

இதை கட்டுப்படுத்துவதற்கு, சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் அவர்கள் வசிக்கிற இடங்களுக்கே செல்கிறது.

மக்கள் அதிகமாக வசிக்கிற பகுதி என்பதால் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்வது கடினம் என கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

சென்னையில் இதுவரை 1,724 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 267. இறந்தவர்கள் 19 பேர். அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை திரு.வி.க.நகரில் 356 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 257 பேரும், அண்ணாநகரில் 141 பேரும், வளசரவாக்கத்தில் 114 பேரும், ராயபுரத்தில் 299 பேரும், தேனாம்பேட்டையில் 206 பேரும், தண்டையார்பேட்டையில் 136 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 4 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்திக்காக ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 50 பரிசோதனை மையங்கள் இன்றைக்கு அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் மூலமாக நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேரை பரிசோதனை செய்கிறோம். இவ்வளவு பேர் பரிசோதனை செய்யப்படுகிற காரணத்தினால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இலவச ரேஷன் பொருட்கள்

தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதமும் (மே) மாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

அரசாங்கத்தின் அறிவிப்பை மக்கள் முறையாக கடைப்பிடித்தாலே, நோய் பரவலை தடுக்க முடியும். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பணிபுரிய விருப்பமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கலாம். அவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகள் சென்று விவரங்களை சேகரித்து, அவர்கள் சொந்த ஊர் செல்ல தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குழுக்கள் அமைத்து கூட்டம் சேராதபடி அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இரவு 10 மணிக்கு மேல்தான் ரெயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பகல் நேரத்தில் அழைத்துச் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எந்தெந்த மாநிலத்துக்கு, எந்த தேதியில் ரெயில்கள் இயக்கப்படும், எந்தெந்த தேதிகளில் அவர்களை அழைத்துச் செல்ல இருக்கிறோம் என்ற விவரங்களை அவர்களிடம் சொல்லவேண்டும். அதுவரை யாரும் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக ஒரு வாரத்துக்குள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.

ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறுகிறது. இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தள்ளி வைத்தது.

இதேபோல் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்ற விரும்பினால், அதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை வழங்கியது.

இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஜே.இ.இ. (மெயின்) தேர்வு எழுத 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 26-ந் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். ஆன்லைன் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோல் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்றும் அப்போது அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இன்னும் சில பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை.

இதில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பல்கலைக்கழக மானிய குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தலாம். கொரோனா பாதிப்பு நீடித்து தேர்வு நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் இன்டர்னல் மதிப்பீடு 50 சதவீதம், முந்தைய செமஸ்டரில் பெற்ற மதிப்பெண் 50 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாம்.

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இளநிலை, முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிவடையும்.

2020-2021-ம் கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad