Type Here to Get Search Results !

தமிழகத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்களாக மாறிவரும் காய்கறி சந்தைகள்; குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 25 நாட்களுக்கு பிறகு கடைகளை திறக்க கலெக்டர் அனுமதி

தமிழகத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்களாக மாறிவரும் காய்கறி சந்தைகள்
தமிழகத்தில் மே 18ம் தேதி உறுதி செய்யப்பட்ட 536 தொற்றுகளில், சென்னையில் 364 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 7,117 பேரில், 1,622 பேர் குணமடைந்துள்ளனர்.  56 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  60.5 சதவிகிதம்.

தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதன் பின், கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, திருவான்மியூர் காய்கறி சந்தையிலும் வியாபாரி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியவே, அதன்மூலம் 100க்கும் அதிகமானோருக்கு பரவியது.

தற்போது சென்னை எம்ஜிஆர் நகர் காய்கறி சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சக வியாபாரிகள் சுமார் 150 பேரை தனிமைப்படுத்தி பரிசோதிக்கவும், அவர்களது உறவினர்கள் மற்றும் காய்கறி வாங்க வந்தவர்களை பரிசோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2 வியாபாரிகளுக்கும் கொரோனா எப்படி பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் நகர் சந்தை தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. அதனால், கோயம்பேடு, திருவான்மியூர், எம்ஜிஆர் நகர் சந்தை உட்பட, சென்னையில் உள்ள மற்ற காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது.

இதேபோல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மற்ற காய்கறி சந்தைகளிலும் தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் கோயம்பேடு, எம்.ஜிஆர்.நகர் காய்கறி சந்தைகளில் இருந்து கொரோனா பரவிய நிலையில், பரவலை தடுக்கும் விதமாக சென்னை பிராட்வே கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி முழுவதும் இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இயங்காது என வியாபாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 25 நாட்களுக்கு பிறகு கடைகளை திறக்க கலெக்டர் அனுமதி
குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் காஞ்சீபுரம் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்கு மாற்றப்பட்டது. இரு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகள் தோறும் கொண்டு சென்று வழங்கப்பட்டு வந்தது.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து 4-ம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால் நேற்று குன்றத்தூர் மற்றும் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று மீண்டும் கடைகளை திறக்க அனுமதி கோரினர்.

அப்போது மாங்காடு பேரூராட்சி அலுவலகம் வந்து இருந்த குன்றத்தூர் சப்-கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. பழனி, பேரூராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது வியாபாரிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சமூக விலகலுடனும், அரசு அறிவித்துள்ள நேரக்கட்டுப்பாட்டுடனும் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் கடைகளை திறக்கலாம் என்றும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் பொன்னையா அனுமதி அளித்தார்.

இதையடுத்து 25 நாட்களுக்கு பிறகு இந்த பகுதிகளில் மீண்டும் கடைகள் திறக்கப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad