Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று; கொரோனாவில் குணமடைந்தவர்களை மிரட்டும் கொரோனா வைரஸ்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
இந்தியாவில் ஒரே நாளில் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று; நாடு முழுவதும் 37,776 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் உள்ள நாடுகளை கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் வல்லரசு நாடுகள்கூட விழிபிதுங்கி நிற்கின்றன. சமூக விலகல் ஒன்றைத் தவிர கொரோனாவை அழிக்க வேறு எந்தவொரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், ஊரடங்கை நம்பியே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கே ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் 25-ந் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து 54 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கப்போகிறது. ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிக்கு ஏற்ப, அரசு எவ்வளவோ பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், அதை நிறைவேற்றுவது மக்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் இன்னும் இந்த வைரசின் உண்மையான குணத்தை மக்கள் அறியவில்லை என்பதற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிடும் புள்ளி விவரம்தான் உதாரணம். ஒவ்வொரு நாளும் அந்த அமைச்சகம் வெளியிடும் விவரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்கு மத்தியில் கொரோனா நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரம், இந்தியாவில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மட்டும் 2,411 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக காட்டுகிறது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக 71 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,223 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே சற்று நிம்மதி அளிக்கும் விஷயம், அதில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கைதான். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10,018 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 37 ஆயிரம் பேரில் சுமார் 11,500 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நோக்கியும், டெல்லியில் 4 ஆயிரத்தை நோக்கியும் செல்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,757 ஆனது. இதனால் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த தமிழகம் 4-வது இடத்துக்கு சென்றது. ராஜஸ்தானில் 2,720 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,715 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 2,500-ஐ நெருங்கிவிட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 601 பேரும், கேரளாவில் 499 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர்.

கொரோனாவில் குணமடைந்தவர்களை மிரட்டும் கொரோனா வைரஸ் 
ஆசிய நாடுகளில் தனது சொந்தக்காலில் நின்று அதிக உயிரிழப்பின்றி, கொரோனாவின் தாக்குதலை வெற்றிகரமாக சமாளித்து வரும் நாடு, தென்கொரியா. இதனால் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்காக பாராட்டையும் அது பெற்றது.

இந்தநிலையில், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்த 292 பேரை மறு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.  இது, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மருத்துவ நிபுணர்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. உலக நாடுகளும் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இந்த 292 பேருக்கும் மீண்டும் ஏதோ ஒரு வழியில் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது.

இந்த நிலையில் குணமடைந்தவர்களின் உடலில் கொரோனா வைரசின் இறந்த துகள்கள் காரணமாகவே இவர்களுக்கு மறு பரிசோதனையில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பேராசிரியர் ஓ மியோங்டான் கூறுகையில், “கொரோனா வைரஸ் செயல் இழந்த நிலையிலும் கூட ‘ஆர்.என்.ஏ.’ என அழைக்கப்படும் ரைபோ கரு அமிலம் மனித உடலின் ஏதாவது ஒரு செல்லில் இருந்திருக்கலாம். மறு முறை சோதனை செய்யப்பட்டபோது செயலிழந்த இந்த வைரசின் ஆர்.என்.ஏ. எடுக்கப்பட்டு இருக்கலாம். இதனால்தான், குணமடைந்தவர்களை சிலநாட்களுக்கு பிறகு மறு பரிசோதனை செய்தபோது அவர்களிடம் தொற்றின் அறிகுறி தென்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.

இதுவரை குணமடைந்த கொரோனா நோயாளிகளை 28 நாட்கள் தனிமைப்படுத்தி அனுப்பிய 13.5 நாட்கள் கழித்தே இந்த மறு பரிசோதனை தென் கொரியாவில் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆய்வு முடிவுகளில் குழப்பம் உருவாகி இருப்பதால், சிகிச்சைக்கு பின்பு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் தற்போது 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மறு பரிசோதனையின்போது ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கான அடையாளத்தை காண்பது தொடர்பாக விரிவான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம், கொரோனா தாக்கி குணமடைந்தவர்களை மறு பரிசோதனை செய்வது 2 சதவீதம் வரை தென்கொரியாவில் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் விதமாக மறுபரிசோதனை செய்வதும் 2.7 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மறு பரிசோதனை செய்யப்பட்ட 292 பேரில் தொடக்க நிலை ஆய்வுக்கு 137 பேரின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவர்களில் 61 பேருக்கு லேசான அளவில் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. 72 பேர் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர். எஞ்சிய 4 பேர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad