Type Here to Get Search Results !

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 2 நாளில் 1,279 பேருக்கு கொரோனா; மதுரையில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 2 நாளில் 1,279 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மேலும் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 6-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மிகவும் வேகமாக பரவ தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1,806 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப் படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்
சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 650-க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு உடையவர்கள்.

மேலும் சூளை பகுதியில் உள்ள தட்டான்குளம், மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்டவர்களும், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஒரு தெருவில் 60-க்கும் மேற்பட்டவர்களும், புளியந்தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்களும், வேளச்சேரியில் காய்கறி வியாபாரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 13 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையை, தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 575 ஆண்கள், 196 பெண்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை 3,320 ஆண்கள், 1,507 பெண்கள், இரண்டு 3-ம் பாலினத்தவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் 324 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 771 பேரில் 324 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 1½ வயது பெண் குழந்தை உள்ளிட்ட 25 குழந்தைகளும் அடங்குவார்கள்.

அரியலூரில் 1 வயது பெண் குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்பட 188 பேரும், கடலூரில் 95 பேரும், காஞ்சீபுரத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், மதுரையில் 2 வயது பெண் குழந்தையையும் சேர்த்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 18 பேரும், திருவண்ணாமலையில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரும், செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கலில் தலா 9 பேரும், வேலூரில் 6 பேரும், விழுப்புரத்தில் 5 பேரும், பெரம்பலூரில் 2 வயது ஆண் குழந்தை உள்ளிட்ட 3 பேரும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தேனி, தூத்துக் குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

41 குழந்தைகள்
தமிழகத்தில் நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 41 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 130 ஆண் குழந்தைகள், 124 பெண் குழந்தைகள் என மொத்தம் 254 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 68 வயது ஆண் மற்றும் 59 வயது ஆண் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து இருக்கிறது. இவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,516 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் 3,381 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

பரிசோதனை மையங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்க தமிழகத்தில் 52 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 413 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 241 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன.

இதில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 541 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது. மேலும் 871 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 9,769 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மதுரையில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிப்பு 112-ஆக உயர்வு
மதுரையில் ஒரே நாளில் போலீஸ்காரர் உள்பட 20 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்தது.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 15 அதிகரித்ததுதான் இதுவரை உச்சமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில் மதுரை நகர் பகுதியில் 12 பேரும், புறநகர் பகுதியில் 8 பேரும் அடங்குவர். இவர்களில் 12 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள். பெண்களில் 5 பேர் கர்ப்பிணிகள். இது போல் 8 வயது சிறுவன், 4 வயது சிறுமி, 14 வயது சிறுவன், 15 வயது சிறுமி ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் சந்தைப்பேட்டை, அல்லிகுண்டம், கொடிக்குளம், வில்லாபுரம், மீனாட்சி நகர், டி.பி.கே.ரோடு, மேலூர், கூடல்புதூர், கீரைத்துறை, பெத்தானியாபுரம், மீனாம்பாள்புரம், கோ.புதூர், மகபூப்பாளையம், விளாச்சேரி, பனையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் மதுரை மேலூரை சேர்ந்த 4 பேருக்கும், செல்லூரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ்காரர்
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 42 வயது போலீஸ்காரர் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக பணியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவருடன் பணியாற்றிய சில போலீஸ்காரர்களுக்கும், இவர் தங்கியிருந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 20 பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவருகிறது. அதன்பேரில் அவர்கள் சென்று வந்த இடங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் நோய் பரவியிருக்கிறது.

112-ஆக உயர்வு
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 20 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல்இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே பொதுமக்கள் ஊரடங்கை சரிவர கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

4 பேர் குணமடைந்தனர்
மதுரையை பொறுத்தமட்டில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 44 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோல் நேற்று அண்ணா நகர், வண்டியூர், ரேஸ்கோர்ஸ் காலனி, மேலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை டீன் சங்குமணி வழி அனுப்பிவைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad