Type Here to Get Search Results !

சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 15 பேருக்கு கொரோனா; மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா; நெல்லை - தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு கொரோனா

சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘சீல்’
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வந்த தாம்பரம் ஆட்டோ டிரைவரின் குடும்பமே கொரோனா பாதிப்புக்கு ஆளாகியது. இந்த நிலையில் அவரது மகள் மூலம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களுக்கும், குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் என 3 பெண் மருந்தக ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

அதேபோல் இரும்புலியூரில் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட தாம்பரத்தில் மொத்தம் 5 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் பல்லாவரம் முத்தாலம்மன் கோவில் தெருவில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கும், குரோம்பேட்டை பகுதியில் 3 பேருக்கும், பம்மல் பெரும்புதூர் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் பட்டாலியனை சேர்ந்த 28 வயது போலீஸ்காரர், திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 45 வயது பெண், ஆவடி பாரதி நகரைச் சேர்ந்த 30 வயது ஆவடி போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஸ்ரீபெரும்புதூர் கார் கம்பெனியில் பணிபுரியும் ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த 44 வயது ஊழியருக்கும், ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 3 பேருக்கும், திருவேற்காடு, திருநின்றவூர், புழல் மற்றும் திருவள்ளூர், கடம்பத்தூர் ஒன்றியங்களில் தலா ஒருவர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 546 ஆனது. இவர்களில் 178 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 363 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘சீல்’ வைப்பு

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி அலுவலர்கள் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் அங்கு வேலை செய்த மற்ற ஊழியர்களையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்பட மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 6 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

மொத்தமுள்ள 13 பேரில் 4 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை கருங்காலக்குடி பகுதியை சேர்ந்த 19 வயது நபர், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த 24 வயது நபர், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஆகியோர் மும்பை மற்றும் கர்நாடகத்தில் இருந்து மதுரை வந்திருந்தவர்கள். இவர்கள் 3 பேரையும் மதுரை மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு முகாம்களில் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 2-வது கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மற்றொருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர். இவரது வயது 21. இவர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றி வந்த நிலையில் அங்குள்ள நோயாளிகளிடமிருந்து இவருக்கு நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றவர்கள் மதுரை செல்லூர், வண்டியூர், விளாங்குடி, அவனியாபுரம், எழுமலை, சொக்கலிங்கபுரம், பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ஆவார்.

இவர்களில் 4 பேர் சென்னையில் இருந்து மதுரை வந்ததாகவும், மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது இவர்கள் 13 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160-ஆக உயர்ந்துள்ளது. அவர்களுடன் சேர்த்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த 107 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மதுரை வில்லாபுரம், விளாச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 2 பெண்கள் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்தது.

நெல்லை - தென்காசிக்கு மராட்டியத்தில் இருந்து வந்த மேலும் 49 பேருக்கு கொரோனா; தூத்துக்குடியில் 8 பேர் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நெல்லை மாநகராட்சி மற்றும் மானூர் பகுதியை சேர்ந்த தலா ஒருவர், நாங்குநேரி வட்டாரத்தை சேர்ந்த 30 பேர், பாப்பாக்குடி, தலைவன்விளை பகுதியை சேர்ந்த தலா 4 பேர், வள்ளியூர், திசையன்விளையை சேர்ந்த தலா 2 பேர் ஆகியோர் அடங்குவர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 136 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்து உள்ளது. இவர்கள் தங்கியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 56 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மராட்டியத்தில் இருந்து சுப்பையாபுரத்துக்கு வந்த கணவன்-மனைவியும், பாவூர்சத்திரம் அருகே மேலகிருஷ்ணபேரிக்கு வந்த 61 வயது நபர் ஒருவரும் அடங்குவர். மேலும் ஒருவர் கண்டப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். மேலும், சென்னையில் இருந்து ராஜகோபாலபேரிக்கு வந்த 33 வயது பெண்ணும் ஒருவர். எனவே, தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று கயத்தாறு, கோவில்பட்டி சுப்பிரமணியபுரம், ராமலிங்கபுரம், முறப்பநாடு மற்றும் நெல்லை மாவட்டம் மானூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெண் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர மேலும் 5 பேர் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad