Type Here to Get Search Results !

சேலத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி; கிருஷ்ணகிரியில் டாக்டரின் மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சேலத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள், தாய்-மகன் என 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் ஏற்கனவே 23 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனிடையே மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்து வந்த பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அவர் தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓமலூர் தாலுகா கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் மேட்டூர் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர் குழுவினர் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொ ரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

இதனிடையே கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த குகை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை கைத்தட்டி மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டீன் பாலாஜிநாதன் கூறும்போது, சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் 2 முறை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். இதில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். மேலும் 28 நாட்கள் கொரோனா தொற்று பாதிக்கப்படாமல் இருந்தால் சிவப்பு மண்டலமாக இருக்கும் சேலம் பச்சை மண்டலமாக மாற்றி அறிவிக்கப்படும். எனவே அரசின் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

கொரோனாவால் பாதிப்பு: சேலத்தில் கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு ‘சீல்’
சேலம் சூரமங்கலம் புதுரோடு அருகே உள்ள ரெயில் நகரில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவர் ஆத்தூரில் ஒரு வங்கியில் உதவி மேலாளராகவும், மனைவி சூரமங்கலம் பகுதியில் ஒரு வங்கியில் கிளார்க்காகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கர்ப்பிணியான அந்த பெண் சமீபத்தில் கேரளாவுக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பாலக்காட்டில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே சேலம் வந்த ஆத்தூர் வங்கி அதிகாரிக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரள தம்பதியினர் வசித்து வந்த சேலம் சூரமங்கலம் ரெயில் நகர் பகுதிக்கு சென்றனர். பின்னர் ரெயில் நகரை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். மேலும் அந்த பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கர்ப்பிணி பணியாற்றி வந்த வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் உள்பட 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணியின் கணவருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே வங்கி அதிகாரி பணியாற்றி வந்த ஆத்தூர் வங்கியும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரியில் டாக்டரின் மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
கிருஷ்ணகிரியில் ஒரு பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர் கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டு கடந்த 28-ந் தேதி மீண்டும் விழுப்புரத்திற்கு பணிக்கு சென்றார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள அவரது டாக்டர் மனைவி, மேலும் தந்தை ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் செய்யப்பட்டது. அதேபோல அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதியைச் சுற்றி 5 கிலோ மீட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் 11 பேருக்கும் நடந்த பரிசோதனை முடிவுகள் நேற்று பிற்பகல் தெரிய வந்தன. அதன்படி டாக்டரின் மனைவி, அவரது தந்தை உள்பட 11 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில் பரிசோதிக்கப்பட்ட 11 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது. இன்னும் 7 நாட்களுக்கு பிறகு அவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும். அதுவரையில் அவர்கள் 11 பேரும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மேலும் அந்த பகுதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். 7 நாட்களுக்கு பிறகு பரிசோதனையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தால், அதன்பிறகு அந்த பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு செய்யப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad