Type Here to Get Search Results !

தென்காசியில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா: அனைத்து தெருக்களும் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு

தென்காசியில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா: புளியங்குடியில் அனைத்து தெருக்களும் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த 72 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நகரசபை ஊழியர்கள், வருவாய் துறையினர், போலீசார் அந்த தெரு மற்றும் அந்த தெருவை சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்தவர்கள், அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் 26 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிக்கப்பட்ட முதியவரின் 2 மகள்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த தெருவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என 49 பேரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதில் நேற்று அதே தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புளியங்குடியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போலீசாரின் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புளியங்குடி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அனைத்து தெருக்களும் கட்டைகள் மற்றும் தகர சீட்டுகள் கொண்டு மூடப்பட்டு உள்ளன.

புளியங்குடி நகர எல்லைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகரசபை ஊழியர்கள் போலீசாருடன் இணைந்து அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தாசில்தார் அழகப்பராஜா மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார், நகரசபை ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

“வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது” - துணை போலீஸ் கமிஷனர் சரவணன் பேட்டி
நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்க்கும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக 94428 66999 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் எந்த உதவி கேட்டாலும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இந்த எண்ணை நேற்று பொது இடங்களில் போலீசார் வைத்தனர். இதை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் தொடங்கிவைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள், ஓட்டல், சில்லறை விற்பனை, நடமாடும் வியாபாரிகள், அழகு நிலையங்கள், லாரி டிரைவர்கள் என அனைவரும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் பேர் உள்ளனர். மாநகர எல்லையில் மட்டும் சுமார் 1000 பேர் உள்ளனர்.

அவர்கள் வசதிக்காக உதவி எண், கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு இந்தி தெரிந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் சுமார் 100 அழைப்புகள் பெறப்பட்டு 1800 பேர் உதவி பெற்றுள்ளனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர் ஆலோசனையின் பேரில் வெளிமாநில தொழிலாளர் வசதிக்காக மாநகரின் முக்கிய இடங்களில் ஹெல்ப்லைன் நம்பர் 94428 66999 குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி கமிஷனர் சதீஷ்குமார் உடனிருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad