Type Here to Get Search Results !

பேக்கரிகளை திறக்க அனுமதி - கலெக்டர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் பேக்கரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். 
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, லாரி ஓட்டுனர்கள், ஏற்றுமதி சார்ந்த பணியாளர்கள், தினக்கூலிகள் மற்றும் நோயாளிகள் போன்ற பொதுமக்களின் உணவுத்தேவையை கருத்தில் கொண்டும், பிரட், பன், பிஸ்கட், ரஸ்க் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காகவும், பேக்கரிகளை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பேக்கரியின் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும். பணியாளர்களை அழைத்துச்செல்லும் வாகனத்துக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும். பேக்கரியின் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். கையுறை, தலைமுடி கவசம் ஆகியவற்றை கண்டிப்பாக அணிய வேண்டும்.

பணியாளர்கள் பேக்கரிக்குள் செல்லும் முன்பும், பேக்கரியை விட்டு வெளியே செல்லும் போதும் மட்டுமில்லாமல், மற்ற நேரங்களிலும் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும். பணியாளர்களுக்கிடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். பணியாளர் யாருக்கேனும், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட வேண்டும். அவரை பேக்கரியில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது.

பேக்கரிக்கு வருகை தரும் நுகர்வோர்களையும், சமூக இடைவெளி பின்பற்ற செய்ய வேண்டும். பேக்கரியில் நுகர்வோர் யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது. பேக்கரியில் பிரட், பன், ரஸ்க், பிஸ்கட் போன்றவற்றுடன் இதர தின்பண்டங்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம். பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பேக்கரிகள் இயங்குவதற்கான அனுமதி நேரத்தை தமிழக அரசு பின்வரும் நாட்களில் மாற்றியமைக்கும் பட்சத்தில், பேக்கரி உரிமையாளர்கள் அரசால் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே செயல்பட வேண்டும். பேக்கரிகளில் டீ, காபி போன்றவை விற்பனை செய்யக்கூடாது.

எனவே, பேக்கரி உரிமையாளர்கள், மேற்கூறிய நிபந்தனைகளை தவறாமல் பின்பற்றி பேக்கரிகளை திறந்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவுப்பொருட்கள் தரமானதாகவும், போதிய அளவிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டைவிட்டு வெளியே வரும் போது முககவசம் அணிவது கட்டாயம் - கலெக்டர் அதிரடி உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு சந்தைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள், இறைச்சி கடைகளில் கூடும் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் இனியும் இதுபோன்ற நிலை தொடராத வகையில் கடை உரிமையாளர்கள் தங்களது கடைக்கு வரும் பொதுமக்களிடையே போதிய சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கேற்ப கடைகளின் முன்பு தகுந்த ஏற்பாடுகளை தவறாமல் செய்ய வேண்டும். அவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது பேரிடர் மேலாண்மை 2005 சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும்.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். வெளியே வரும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோய் தொற்று பரவாமல் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வது எப்படி? - கலெக்டர் விளக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வது எப்படி? என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள், போதுமான அளவு கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காய்கறி மற்றும் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனுக் காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருவள்ளூரில் 12 ஆயிரத்து 291 ஹெக்டேர் பரப்பில் பழங்களும், 4 ஆயிரத்து 485 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலான காய்கறிகளும், பழங்களும் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை, உதவி இயக்குனர் அலுவலகத்தை அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

நடவடிக்கை எடுத்துள்ளது

இதுதொடர்பாக விவசாயிகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை வழங்குமாறு மேற்கண்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காய்கறிகள் விற்பனையை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களை இயக்கவும், நுகர்வோருக்கு அருகிலேயே நேரடியாக நியாயமான விலையில் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உதவிட வேண்டும்

விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகி, தேவையான உதவிகளை பெறலாம்.

தமிழ்நாடு அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ள இத்தகைய வாய்ப்பினை அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வித தடையுமின்றி கிடைத்திட உதவிட வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் - கலெக்டர் உறுதி
கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என்று கலெக்டர் கண்ணன் கூறினார்.

வெம்பக்கோட்டை பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ராஜபாளையம் தொழிலதிபர், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 202 தூய்மை காவலர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், தளவாய்புரம் அரிசி வியாபாரிகள் சங்கம், ராஜபாளையம் அனைத்து பலசரக்கு வியாபாரிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் பங்களிப்புடன் 296 தூய்மை காவலர்களுக்கு ரூ.4.44 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு-பகல் பாராமல் பணியாற்றுகின்றனர்.

இந்த பணிகளில் முக்கிய பங்காற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு, அவர்களின் பாதுகாப்பிற்காக கையுறை, முககவசம் மற்றும் கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. மேலும் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். உடனடியாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தங்களின் நலத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு நீங்கள் பணிபுரிய வேண்டும். மேலும் இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து தூய்மை காவலர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

வெம்பக்கோட்டையில், தூய்மை காவலர்களிடம் சம்பளம் தாமதம் இன்றி கிடைக்கிறதா என கேட்டார். மதிய உணவிற்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டஅவர் அதிகாரிகளை அழைத்து ஊராட்சி நிர்வாகம் மூலம் சாப்பாடு வழங்கவேண்டும், சம்பளம் முதல் வாரத்தில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கரநாராயணன், வெம்பக்கோட்டை தாலுகா மண்டல அலுவலர் சவுந்தர்ராஜ், ராஜபாளையம் தாலுகா மண்டல அலுவலர் செல்வக்குமார், பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் சோலைச்சாமி, வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) வெள்ளைசாமி, தாசில்தார் விஜயராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி சந்தானம், காத்தம்மாள், பசுபதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad