Type Here to Get Search Results !

மதுரை சித்திரை திருவிழாவை நடத்தக்கோரி வழக்கு - அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

சித்திரை திருவிழாவை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணகோன் அறக்கட்டளை நிர்வாகி அருண் போத்திராஜ். இவர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா என்பது உலக பிரசித்தி பெற்றது. சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடக்கும்.

அதேபோல சித்திரை மாதத்தில் அழகர்கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடக்கும். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து வந்து மதுரை வைகை ஆற்றில் இறங்குவார். இந்த நிகழ்ச்சியை காண பல லட்சம் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகளுக்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இதற்கான ஏற்பாடுகள் எதையும் அதிகாரிகள் செய்யாமல் உள்ளனர். எனவே வழக்கம் போல இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உள்பட சித்திரை திருவிழாவை நடத்த கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு இருந்தது. ஆனால் இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறை மறுத்துவிட்டது. மேலும் இந்த மனுவானது, கோர்ட்டின் வழக்கமான பணி நாட்களின்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி: கறவை மாடுகளை பராமரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
கொரோனா பரவல் எதிரொலியாக பண்ணையில் கறவை மாடுகளை பராமரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா நோயின் தாக்கம் பால் பண்ணையில் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கால்நடை விரிவாக்க கல்வி இயக்கம் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதனை பண்ணையாளர்கள் கடைபிடிப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பண்ணையை தினமும் முறையான பண்ணை கழிவு மேலாண்மை முறைகளை பின்பற்றி சுத்தம் செய்து 1 சதவீத சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசலை தெளிக்க வேண்டும். பண்ணைக்குள் எந்த புதிய நபர்கள் வருவதையும் அனுமதிக்கக் கூடாது. பண்ணை நுழைவு வாசலில் கட்டாயம் கிருமிநாசினி தெளித்து வைக்க வேண்டும்.

பண்ணைக்குள் வரும் வேலையாட்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்கள் தங்கள் கைகளை 0.125 சதவீதம் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசல் அல்லது சோப்பால் கைகளை கழுவ வேண்டும். பண்ணை வேலையாட்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பால் கறவை எந்திரங்களை சுத்தமாக சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்.

வெளியில் இருந்து வரும் பால்காரர்கள் ஆரோக்கியமாக உள்ளனரா? என்பதை பண்ணையாளர்கள் உறுதி செய்து கொள்வது அவசியம். அவர்கள் கைகளை சுத்தமாக சோப்பால் கழுவிய பின்னரே மாடுகளின் அருகில் செல்லவோ, பால் கறக்கவோ அனுமதிக்க வேண்டும்.

விவசாயிகள் பண்ணையில் இருந்து வெளியே பால் விற்பனைக்கோ, தீவனம் வாங்குவதற்கோ செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். விவசாயிகளின் வாகனங்கள், வெளி ஆட்கள் வரும் வாகனங்களையும், முக்கியமாக வாகன சக்கரங்களை கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். பண்ணையில் எந்த இடத்திலும் எச்சில் துப்பக்கூடாது. இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

கறவை மாடுகளை பராமரிப்பவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பண்ணையில் எந்த இடங்களையும் தொடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதால் பண்ணையில் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad