Type Here to Get Search Results !

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுகிறார்கள்: இனிமேலும் இளைஞர்களுக்கு கருணை காட்ட முடியாது - கலெக்டர் அன்புசெல்வன்

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது இனிமேலும் கருணை காட்ட முடியாது என கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 250 ஊராட்சிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிகள் ஆகியவற்றில் ஒரே நாளில் போர்க்கால அடிப்படையில் வீடுகளின் முகப்பு பகுதி மற்றும் சாலை தெருக்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் வைரஸை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை பொறுத்தவரை பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். ஆனால் ஒரு சில இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊரை சுற்றுவது கண்டிக்கத்தக்கது. இனிமேலும் அவர்கள் மீது கருணை காட்ட முடியாது. ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு பணிக்கு செல்ல முடியாது, வெளிநாட்டுக்கு செல்ல முடியாது. இதை அவர்கள் உணர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவை பொறுத்தவரை நாம் இன்னும் 2-வது நிலையில் தான் உள்ளோம். 3-வது நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறை அதிகாரிகளும் சோர்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு மே மாதத்துக்கு வழங்கவேண்டிய ரேஷன் பொருட்கள் அந்தந்த கடைகளுக்கு போய் சேர்ந்துள்ளன. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். 4-ந் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பொதுமக்கள் பொருட்களை வாங்க வரவேண்டும். பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உடன் இருந்தார்.

கொரோனா சமூக பரவலை தடுக்க மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு - கலெக்டர் அண்ணாதுரை அறிவிப்பு
கொரோனா சமூக பரவலை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக பரவுவதை தடுக்கும் பொருட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை கடைபிடிக்கும் விதமாக மருந்து கடைகளை தவிர்த்து பலசரக்கு மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் எதுவும் இயங்காது. ஆகவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

விழுப்புரம் நகரில் காய்கறி மொத்த விற்பனையாளர்கள், மளிகை கடை வியாபாரிகள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் கடைகளை திறப்பது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினார்கள். அந்த நடைமுறையானது கொரோனா சமூக பரவலை தடுப்பதற்கு உகந்ததாக இல்லை என தெரியவருவதால் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த வண்ண அட்டைகள் முறையே சரியாக இருக்கும் என்பதால் அதனையே பின்பற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த வண்ண அட்டை நடைமுறையை மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வார்டு வாரியாக வழங்கப்பட்டுள்ள வண்ண அட்டைகளை பயன்படுத்தி விழுப்புரம் நகர மக்கள் வீட்டிற்கு ஒரு நபர் மட்டும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லலாம். இந்த நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று: பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் 750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை தடுத்திடும் வகையில் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும் நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்திடவும், கண்டிப்பாக முககவசம் அணிந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது ராமநாதபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் இந்திரா, தாசில்தார் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad