Type Here to Get Search Results !

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசின் சார்பில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி கொரோனா நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவருடைய 32 வயது கர்ப்பிணி மனைவியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படிப்படியாக குறைந்து வருகிறதா? - மதுரையில் 3 நாட்களாக கொரோனா பாதிப்பில்லை
மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பில்லை என மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது 14-ந் தேதியுடன் முடிவடையுமா? என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுபோல் நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய நாளும் மதுரையில் எந்தவித பாதிப்பும் இல்லை. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆகவே இருந்து வருகிறது. அதில் 3 பேர் குணமடைந்து தங்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 22 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மதுரையில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது பொதுமக்கள் மற்றும் டாக்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 3 பேர் முற்றிலும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். மதுரையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இதனால் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பின்னர்தான் அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கூற முடியும். இதுபோல் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு மூலம் கொரோனாவால் ஏற்படவிருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்தால் இந்த நோயின் பாதிப்பு அதிகரிக்கும். இதனால் அனைவரும் ஒத்துழைப்பு தந்து இந்த வைரசை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு 2 சிறப்பு விமானங்கள் - 344 பேருடன் புறப்பட்டு சென்றன
சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு 344 பேருடன் 2 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தங்கள் நாடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள், சுற்றுலா பயணிகளை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிறப்பு விமானத்தில் அழைத்துச்செல்ல மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த சில தினங்களாக சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, இங்கு தவித்த அந்த நாட்டு சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு மும்பை வழியாக சிறப்பு விமானம் சென்றது. இந்த விமானம் சென்னையில் இருந்து 96 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. அங்கு மேலும் அமெரிக்கர்களை அழைத்துச்செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து ஜப்பானுக்கு 248 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.

தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய கோரிக்கை
இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை நிரந்தரமாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், இளையான்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் கோடைகாலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வந்ததால் இந்த பகுதியில் கடந்த 2006-2011-ம் ஆண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை கொண்டு செல்லப்பட்டது.


இதற்காக பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் வாரந்தோறும் 2 முறை காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையத்தில் இருந்த மின் மோட்டார் பழுதாகி பல நாட்களாகியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. மேலும் தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் குடங்களை எடுத்து வந்து சாலையில் ஓடிய தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

இதனால் தாயமங்கலம் பகுதி சாலை ஆறுபோல் காட்சியளித்தது. தற்போது கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதற்கு முன்பாகவே இந்த பகுதியில் குடிநீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தாயமங்கலம் பகுதியில் நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மோட்டாரையும், குழாய் உடைப்பையும் நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி குட்ஷெட்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - பணிக்கு வரும் போது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு
திருச்சி குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வரும்போது போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதாக குற்றம் சாட்டினார்கள்.

திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, உரம், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயிலில் வந்து இறங்கும். அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைப்பார்கள். வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 200 லாரிகளில் சரக்குகள் ஏற்றி செல்வார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபிறகு பொதுவினியோக திட்டத்துக்காக 350 லாரிகளுக்கு மேல் ரெயிலில் இருந்து சரக்குகளை ஏற்றி அனுப்புகிறார்கள்.

இந்த பணியில் 300 லாரி டிரைவர்கள், 600 சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 900 பேர் உள்ளனர். குட்ஷெட்டுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களின் பெரும்பாலானவர்களின் வீடுகள் அதிக தொலைவில் இருப்பதால் தினமும் மோட்டார்சைக்கிளில் குட்ஷெட்டுக்கு வந்து பணி செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார்கள். ஒருசிலர் மறுநாள் காலை தொடர்ச்சியாக வேலை இருந்தால் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த ஒருவாரமாக 144 தடை உத்தரவை காரணம் காட்டி வீட்டில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்வதாகவும், இதனால் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை உள்ளதாகவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் லாரிகளை இயக்காமல் சரக்குகளை இறக்க மறுத்து குட்ஷெட் பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மாலா ஆகியோர் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குட்ஷெட் யார்டுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு சென்றனர். இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் 2 மணிநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad