Type Here to Get Search Results !

திருச்சி துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு; பூந்தமல்லி, திருவொற்றியூர் மண்டலத்தில் 9 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 7 பேரும், அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய குடும்பங்கள் மற்றும் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள 93 குடும்பங்கள் வசிக்கும் தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, நோய் தொற்று காரணமாக துவரங்குறிச்சி கிராமம், பொன்னம்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 3, மற்றும் 4 முதல் 12 முடிய உள்ள வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள நபர்கள் அத்தியாவசிய தேவையை தவிர வேறு எதற்கும் வெளியே செல்லக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே வசிக்கும் பிற கிராமங்களை சேர்ந்தவர்கள் மருந்துகள் தேவை என துவரங்குறிச்சி பகுதிக்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது.

தடை உத்தரவு முடியும் வரை துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இயங்கும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும்(மருந்து கடைகள் தவிர) திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உள்பட சரக்கு வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பால், கியாஸ் சிலிண்டருக்கு அனுமதி

தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள மளிகை கடை உரிமையாளர்கள் மொத்த விற்பனை கடையில் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. துவரங்குறிச்சியில் செயல்படும் வங்கிகளில் பணிபுரியும் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலம் கிராமங்களில் உள்ள அவர்களது வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் அருகில் உள்ள அதே வங்கி கிளைகள் மூலம் வங்கிப்பரிவர்த்தனை நடத்தி கொள்ளவும் வங்கி கிளை மேலாளருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பால் மற்றும் கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கிடவும், துவரங்குறிச்சி பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் மற்றும் எடுத்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கு உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் கிருமிநாசினி தெளித்திடவும், தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே வசிக்கும் குடும்பத்தினருக்கு அவரவர் வசிக்கும் இடங்களிலேயே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஆவன செய்திடவும், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இந்த உத்தரவின் அடிப்படையில் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

பூந்தமல்லி, திருவொற்றியூர் மண்டலத்தில் 9 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பூந்தமல்லி மற்றும் திருவொற்றியூர் மண்டலத்தில் 9 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துவந்த பூந்தமல்லியை சேர்ந்த மேலாளர் ஒருவருக்கும், அவருடன் சீட்டு விளையாடிய அவரது நண்பருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களது ரத்த மாதிரிகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அதில் மேலாளரை ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்த ஆன்லைனில் ஜாதகம் பார்க்கும் அவரது 28 வயது நண்பருக்கும், அவரது உறவினர் மகனான 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் ராமமூர்த்தி நகரில் சகோதரர்கள் உள்பட 4 பேர் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2 நாட்களுக்கு முன்பு எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 10-வது தெருவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி தற்போது சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எண்ணூர் பகுதிகளில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சத்தியவாணி முத்து நகர் பகுதி தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் மயிலாடுதுறையில், முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன
மயிலாடுதுறையில், கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் உறுதி

மயிலாடுதுறை நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவரின் வீட்டை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் அந்த தெருக்களில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். அடைக்கப்பட்டுள்ள தெருக்கள் அனைத்திலும் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மூடப்பட்ட வங்கிகள்

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட தெருக்களுக்கு மிக அருகில் உள்ள 3 வங்கிகளையும் மூடும்படி நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஒரு தனியார் வங்கி ஆகிய 3 வங்கிகள் மூடப்பட்டன. அந்த வங்கிகளின் முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி வங்கி கிளையின் செயல்பாடுகள் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அறியாமல் நேற்று தேசியமயமாக்கப்பட்ட முதன்மை வங்கியின் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், அறிவிப்பு பலகையை பார்த்துவிட்டு ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

புளியங்குடியில் மேலும் 4 பேருக்கு கொரோனா - நெல்லை ஆஸ்பத்திரியில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
புளியங்குடியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களில் 19 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் புளியங்குடியில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கள் 4 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

புளியங்குடியில் கொரோனா பரவல் வேகமாக உள்ளதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நகரம் முழுவதும் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து தனிமைப்படுத்துகின்றனர். இவ்வாறு நேற்று வெளியே சுற்றிய 10 பேர் போலீசாரால் பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

புளியங்குடி பகுதி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற போலீசார் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளனர்.

மக்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியதும், தன்னார்வ தொண்டர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று, காய்கறிகள், பலசரக்கு, மருந்து உள்ளிட்ட தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நகராட்சி மூலம் அனைத்து தெருக்களிலும் ரூ.100 மதிப்பில் காய்கறி தொகுப்பு அடங்கிய பைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ்ராஜ், ஆடிவேல் மற்றும் போலீசார் நகரம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈசுவரன், தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் நகர் முழுவதும் தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில் 7 பேர் வீடு திரும்பினர்

நெல்லை மாவட்டத்தில் 62 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தில் சிலரும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 5 பேர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரில் ஒருவர் டவுனை சேர்ந்தவர், மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தியவர்களுக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை - 2 பேருக்கு கொரோனா அறிகுறி
செய்யாறு அரசு பாலிடெக்னிக்ள கல்லூரியில் தனிமைப்படுத்தியவர்களுக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது தெரியவந்தது.

செய்யாறு சுகாதார மாவட்டத்தை சேர்ந்த வந்தவாசி, ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு ஆகிய தாலுகாவை சேர்ந்தவர்கள் உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12 பேருக்கு திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து குணமடைந்து சிலர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கட்ட தற்காலிக மருத்துவ பிரிவில் வந்தவாசியை சேர்ந்த 14 பேர், ஆரணியை சேர்ந்த 7 பேர், அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் செய்யாறை சேர்ந்த ஒருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்ததால் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இவர்கள் கடந்த 28 நாட்களாக கண்காணிப்பில் உள்ளனர். இதனால் தங்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் சுகாதார துணை இயக்குனர் அஜிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரேபிட் கருவி மூலம் கொரோனா தொற்று உள்ளதா? என 25 பேருக்கு பரிசோதனை மேந்கொண்டனர். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளதாக ரேபிட் கருவியில் தெரியவந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தவர்களிடம் ஏற்கனவே எடுத்து அனுப்பி உள்ள ரத்த மாதிரி முடிவு வந்தபிறகு தான் அனுப்ப முடியும் அதுவரை வீட்டிற்கு அனுப்ப முடியாழ என கூறிவிட்டு துணை இயக்குனர் அங்கிருந்து சென்றார்.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாக தெரியும் நிலையில் சமூக தொற்று நிகழாமல் தடுக்க அவர்களை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திற்கு கொரோனாவை கண்டறிய 900 துரித பரிசோதனை கருவிகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பை கண்டறிய துரித பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த கருவிகள் முதல் கட்டமாக 900 ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த துரித பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது குறித்து நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்புக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை தாங்கி, கருவிகளை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் துரித பரிசோதனை கருவிகள் மூலம் முதல்கட்டமாக நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 9 இடங்களில் பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களில் யாருக்காவது அறிகுறி இருந்தால் அவர்களுக்கு முதலில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல் ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கும், சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய அறிகுறி உள்ள நபர்களுக்கும் துரித பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம்.

இந்த துரித பரிசோதனை கருவியில் கொரோனா இல்லை என முடிவு வந்தால் அவருக்கு கொரோனா இல்லை என்று கூறி விட முடியாது. பி.சி.ஆர். சோதனை முடிவே உறுதியானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவே இந்த துரித பரிசோதனை கருவி பயன்படுத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

சிவகங்கைக்கு வந்த ‘ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள்’ - பரிசோதனை எப்போது? அதிகாரி விளக்கம்
சிவகங்கைக்கு ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் வந்துள்ளன. அந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.

கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறைக்கு 300 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 300 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்துள்ளன. இதில் 40 கருவிகள் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும், 40 கருவிகள் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும், மீதம் உள்ள கருவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்று அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக 7 நாட்கள் தொடர்ந்து ஒருவருக்கு காய்ச்சல், சளி இருந்தால் மட்டுமே இந்த கருவியின் மூலம் பரிசோதிக்கப்படும். இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதை மீண்டும் ஒரு தடவை மதுரைக்கு அனுப்பி பரிசோதித்து உறுதி செய்யப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் சளி தொல்லை இருந்தால், அதன்மூலம் பரிசோதனை செய்ய ஏற்கனவே வி.டி.எம். என்ற கருவியும் 300 உள்ளன. இதனால் தேவையான அளவு பரிசோதனை கருவிகள் உள்ளன. இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் இந்த கருவிகளை கொண்டு பரிசோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் உறுதியானது
தர்மபுரியில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் உறுதியானது.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 26-ந்தேதி வந்து சென்ற சேலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு உள்ளானது அண்மையில் உறுதியானது. இதையடுத்து அவர் வந்து சென்ற வீட்டில் வசிக்கும் அவருடைய உறவினர்கள் 5 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தினார்கள். அவர்களுடைய ரத்த மாதிரிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அந்த 5 பேரும் தொடர்ந்து வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா
ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி, வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் நேற்று முன்தினம் வரை மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அதேநேரம் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த 8 பேர் உள்பட மேலும் 13 பேர் குணம் அடைந்தனர். இதையடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவர்கள் நேற்று வீட்டுக்கு திரும்பினர். எனினும், தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவத்தூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த பெண் சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் ஊருக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், பயணிகள் என மொத்தம் 34 பேரை கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவு வெளியானது. அதில் ஆம்னி பஸ்சின் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 41 வயதான இவர் அம்பிளிக்கை அருகேயுள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் ஆவார். யார் மூலம் இவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. எனவே, அவருடைய குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவருக்கு அவருடைய உறவினர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிரைவர் மற்றும் அந்த பெண் ஆகியோர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் நேற்று முன்தினம் வரை 33 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 17 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியை சேர்ந்த வாலிபர் மட்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மீதமுள்ள 13 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 2 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 208 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இவர்களில் 3 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் விழுப்புரம் மாசிலாமணிபேட்டையை சேர்ந்த டீ மாஸ்டர், மற்ற 2 பேரும் பெண்கள். இவர்கள் 2 பேரும் விழுப்புரம் கந்தசாமி லே-அவுட், பூந்தமல்லி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு விழுப்புரம் திரும்பி வந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் 3 பேரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,667 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 36 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,365 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 266 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,735 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad