Type Here to Get Search Results !

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாள் முழு ஊரடங்கு; சேலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு - எடப்பாடி பழனிசாமி

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாள் முழு ஊரடங்கு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெருநகரங்களில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்கள் இதே உத்தரவு அமலில் இருக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் பலர் வாகனங்களில் சுற்றுவதை காண முடிகிறது. போலீசார் அபராதம் விதிப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்த போதிலும் பலன் இல்லை. இதனால் பெருநகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து 24-4-2020 அன்று (நேற்று) என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்த நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இதுகுறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்து உள்ளது.

4 நாட்கள் முழு ஊரடங்கு

* சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.

* திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28-4-2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.

இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

* மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்.

* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

ஏ.டி.எம். மையம் செயல்படும்

* இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

* அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏ.டி.எம். மையம்) வழக்கம்போல் செயல்படும்.

* உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

* முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவிபுரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

* ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

* ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

* கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

* அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

* மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

மீறினால் கடும் நடவடிக்கை

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர பிற இடங்கள் மற்றும் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.

இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

இந்த தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒத்துழைப்பு தேவை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு : வாகனங்கள் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் நாளை முதல் 28 ம் தேதி வரை சேலத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்க உள்ள நிலையில் இன்று முதலே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad