Type Here to Get Search Results !

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்; மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்த உத்தரவு

முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில், வரும் மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும்,  கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஊரடங்கு  மேலும், நீட்டிக்கப்படுமா ? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மே 3 ஆம் தேதியுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், வரும் மே 2 ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது. ஏற்கனவே, நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டம்  முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

காணொலி காட்சி மூலம் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 2-ம் அமர்வு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்த உத்தரவு
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அடையாறு மண்டலத்தில் 10 வார்டுகள் இவரது கண்காணிப்பில் உள்ளது. இவர், தினமும் தூய்மை பணியாளர்களை சந்தித்து எந்தெந்த பகுதிகளில் சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுரை வழங்குவார். தினசரி சைதாப்பேட்டை லாரி நிலையத்தில் பணியை தொடங்கி, அனைத்து மண்டல வார்டுகளையும் ஆய்வு செய்வார்.

எனவே, இவரின் தொடர்புகளை கண்டறியும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர், நேற்று முன்தினம் வரை பணிக்கு வந்துள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவருடன் சேர்த்து மாநகராட்சியை சேர்ந்த பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  எனவே, அனைத்து தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad