பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அதன் வெளியுறவு கொள்கைகளை இயக்கி வருகிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான விசாரணையின்போது செனட்டர் ஜோ டோனெல்லா தாலிபன்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை இன்னும் உதவிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமெரிக்க கப்பற்படை மூத்த அதிகாரி ஜோசஃப் டன்போர்ட் கூறும்போது, "பாகிஸ்தானின் உளத்துறை அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது.
கடந்த ஏழு வருடங்களாக பாகிஸ்தானின் நடவடிக்கையில் மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் நடவடிக்கையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை "என்றார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மட்டீஸும் அமெரிக்க நாடாளுமன்ற நிகழ்வில் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பை கடுமையாக சாடினார்.
ஜிம் மட்டிஸ் கூறும்போது, ”பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அரசாங்கம் வகுத்த வெளியுறவு கொள்கைகளின்படி இயங்காமல் தனக்கென தனியாக வெளியுறவு கொள்கைகள் வகுத்து இயங்குகிறது.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு வளைந்து கொடுக்கிறது” என்றார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பு மீது ஜிம் மேட்டிஸ் இத்தகைய பகிரங்க குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதன்முறையாகும்.
முன்னதாக அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆசியா குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஆசிஃப் தெற்காசியாவில் ஜிகாதிகளின் எழுச்சிக்கு அமெரிக்காவும் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments