மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு மூன்று மாத ஊதியமாக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பிசிசிஐ அளித்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான பணிக்காக அவருக்கு இந்த ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் கடந்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் அணியின் பயிற்சியாளராக அவர் விரும்பினார்.
ஆனால் கேப்டன் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே தனது முடிவை மாற்றிக்கொண்டு, பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார். கும்ப்ளே விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மூன்று மாத ஊதியமாக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதேபோல் வெளிநாட்டு தொடரில் விளையாடியதற்காக வருவாய்ப் பகிர்வு அடிப்படையில், அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு 57 லட்சத்து 88 ஆயிரத்து 373 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது. விஜய் ஹஸாரே, ராஞ்சி டிராபியில் பங்களித்ததற்காக ரவி சாஸ்திரி 69 லட்சம் ரூபாயும், தோனி 57 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளனர்.
Post a Comment
0 Comments