ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் -கமல்ஹாசன்
சென்னை
தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார்.
இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார்.
இந்தநிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. இருவரும் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் என்னை சந்திக்க கேட்டதையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர். எனது தந்தை காலம் முதலே அரசியல் தொடர்புடையவன் நான் இவ்வாறு அவர கூறினார்.
கெஜ்ரிவால் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகராகவும், நல்ல மனிதனாகவும் உள்ளார் . நான் அவருடைய ரசிகன் . ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டில் பெரும்பாலானோர் மதவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் கொண்டு உள்ளனர். கமல் அரசியலுக்கு வரவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.