திஸ்பூர்:
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பீகாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119-ஆக அதிககரித்துள்ளது. அசாமிலும் வெள்ளம் குறையாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கியுள்ளது. பீகார் மற்றும் வட மாநிலங்களில் வெள்ள பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏந்கனவே பீகாரின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் புதியதாக சகர்சா, கஜாரியா மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு கடுமையாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு மேலும் 1 வாரத்திற்கு மழை நீடிக்கும என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனையடுத்து வெள்ளத்தின் தீவிரம் தற்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 216 குழுக்கள் இரவு, பகல் பாராமல் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதில் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் முழுவதும் 98 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவி எண்ணாக 104 அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பாலங்களும், சாலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக வெள்ளத்தின் பிடயில் சிக்கியுள்ள அசாமிலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 24 மாவட்டங்களில் 34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். சுமார் 2,500 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Post a Comment
0 Comments