போதை மருந்து விவகாரம் : சார்மி - புரி ஜெகநாத்துக்கு ரத்த பரிசோதனை
போதை மருந்து விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேர்களுக்கு அமலாக்க அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இவர்களில் முமைத்கான் தவறான விலாசம் தந்து தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் அதிகாரிகள் நேற்று முதல் கிடுக்கிபிடி விசாரணை தொடங்கினர். இயக்குனர் புரி ெஜகநாத் விசாரணைக்காக அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார். அவரிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன.
பிறகு அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நடிகை சார்மி இன்று அதிகாரிகள் முன் ஆஜராவதாக இருந்தது. உடல்நிலை பாதிப்பால் ஆஜராகவில்லை. நேரில் வரும்போது அவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. போதை மருந்து விவகாரத்தில் சார்மி சிக்கியிருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுகுறித்து அவரது தந்தை தீப் சிங் உப்பல் கூறும்போது,’ போதை மருந்து விவகாரத்தில் சார்மிக்கு தொடர்பில்லை. இதனால் அவர் இதயம் உடைந்து போயிருக்கிறார். எந்தவித சட்டவிரோத செயலிலும் சார்மி ஈடுபட்டதில்லை. உண்மை அறியாமல் சார்மி பற்றி தகவல் வெளியிடக்கூடாது’ என்றார். தந்தையின் பேட்டியால் ஆறுதல் அடைந்த சார்மி அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நோட்டீஸ் பெற்ற மற்ற நடிகர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடக்க உள்ளது.