இந்தியாபுதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 65% வாக்கு பெற்று பெரும் வெற்றி காங் அணி மீராகுமாருக்கு 35% ஓட்டு
புதுடெல்லி:
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அவர் 65 சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் அணியை சேர்ந்த மீரா குமார் 35 சதவீத வாக்குகள் பெற்றார். இதையடுத்து, நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25ம் தேதி பதவி ஏற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் நிறுத்தப்பட்டார். இருவருமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைத்து மாநில எம்பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்பி.யின் ஒட்டு மதிப்பு 708. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதன் அடிப்படையில் தமிழக எம்.எல்.ஏ. ஒருவரின் வாக்குப் மதிப்பு 135. ஜனாதிபதி தேர்தலின் மொத்த ஓட்டு மதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில், 50 சதவீதம் அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுக்கள் பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
தேஜ. கூட்டணி வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் அவர் 60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என மீரா குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. 771 எம்.பி.க்கள், 4,109 எம்.எல்.ஏ.க்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். ஓட்டுப் பதிவுக்காக நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மொத்தம் 32 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 768 எம்.பிக்களும், 4,083 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.
இந்த வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற வாக்குச்சாவடி மையத்தில் பதிவான ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. பின்னர். மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 8 சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதை இரு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் குழு அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆரம்பம் முதலே ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருந்தார். இறுதியாக, மாலையில் தேர்தல் முடிவு வெளியானது. அதில், ராம்நாத் கோவிந்த் மொத்தம் 2,930 ஓட்டுகள் பெற்றிருந்தார். இவற்றின் மதிப்பு 7 லட்சத்து 2,044. இவர் 65.65 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். மீரா குமார் மொத்தம் 1,844 ஓட்டுகள் பெற்றார். இவற்றின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314. வாக்கு சதவீதம் 34.35. பதிவான ஓட்டுகளில் 77 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நாட்டின் 14வது ஜனாதிபதியாக அவர் வரும் 25ம் தேதி பொறுப்பேற்கிறார்.
மாற்றி விழுந்த எம்எல்ஏ ஓட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீராகுமாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த கூட்டணியைச் சேர்ந்த 13 எம்எல்ஏ.க்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள், கட்சியின் முடிவுக்கு மாறாக ராம்நாத் கோவிந்துக்கு ஓட்டுப்போட்டிருந்தனர். குஜராத்தில் 11 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு ஓட்டுப்போட்டனர்.
பிரதமர் மகிழ்ச்சி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு ராம்நாத் கோவிந்த்துக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்க எனது வாழ்த்துக்கள். ராம்நாத்துக்கு கிடைத்த அமோக ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை தேர்ந்தெடுத்த எம்.பி.க்களுக்கும், பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அடித்தள மக்களுக்கு கிடைத்த வெற்றி
பா.ஜ தலைவர் அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துக்கள். ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. இது ஏழைகளுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும், பின்தங்கியவர்களுக்கும் கிடைத்த வெற்றி. அவர் மிகச் சிறந்த ஜனாதிபதியாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
மதச்சார்பின்மைக்கான எனது போராட்டம் தொடரும்
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மீரா குமார் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மதச்சார்பின்மைக்கான எனது போராட்டம் தொடரும்’’ என்றார். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவர் அளித்த பேட்டியில், ‘‘மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எவ்வளவு மனசாட்சி உள்ளது என பார்ப்போம்’’ என கூறியிருந்தார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பருன்கா என்ற கிராமத்தில் 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ராம்நாத் கோவிந்த் பிறந்தார். வணிகவியலில் பட்டப்படிப்பை முடித்த அவர், கான்பூர் பல்கலை.யில் சட்டப்படிப்ைப படித்து வக்கீலாக பணியாற்றினார். பின்னர் டெல்லிக்கு சென்று சிவில் தேர்வுக்கு படித்தார். தனது 3வது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனாலும், அந்த பதவியின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. வக்கீல் தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தினார். அதன் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலைக்குழு சட்ட ஆலோசகராக 1980-93 வரை பணியாற்றினார். ராம்நாத் கோவிந்தின் மனைவி பெயர் சவிதா. இவர்களுக்கு பிரசாந்த் குமார் என்ற மகனும் சுவாதி என்ற மகளும் உள்ளனர்.
ஜனாதிபதியாக ஆசைபடவில்லை
தேர்தல் வெற்றிக்குப்பின் பேட்டியளித்த ராம்நாத் கோவிந்த், ‘‘நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாக உணர்கிறேன். வாழ்க்கைக்காக போராடுபவர்களின் பிரதிநிதியாக நான் இருப்பேன். ஜனாதிபதியாக இருக்க நான் ஒருபோதும் ஆசைபட்டதில்லை. ஒருமைப்பாட்டு உணர்வுடன் கடமையை செய்பவர்களுக்கு எனது வெற்றி ஒரு நல்ல தகவல்’’ என்றார்.
மீராவை புறக்கணித்த ஆந்திரா
ஜனாதிபதி தேர்தலில் ஆந்திரா மாநிலத்தில் ஒரு ஓட்டு கூட விழவில்லை. அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், நாகாலாந்து மாநிலத்தில் ஒரே ஒரு ஓட்டும், அருணாச்சலில் 3 ஓட்டுக்களும் கிடைத்தன. இதேபோல், ராம்நாத் கோவிந்துக்கு கேரளாவில் ஒரே ஒரு ஓட்டு விழுந்தது. தலைநகர் டெல்லியில் அவர் 6 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
ராம்நாத் வீட்டில் கோலாகலம்
ராம்நாத் கோவிந்தின் வீடு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதியின் மகரிஷி தயானந்த் விகார் காலனியில் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றதும், அவரது வீட்டில் சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடி ஒருவரையொருவர் கட்டித் தழுவி இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். கல்யாண்பூர் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின்ர. தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, அப்பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ராம்நாத்துக்கு 522 எம்.பி.க்கள் ஓட்டு
ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 522 எம்.பி.க்கள் வாக்களித்து இருந்தனர். இவர்களின் ஓட்டு மதிப்பு 3 லட்சத்து 69 ஆயிரத்து 576. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக 225 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர். இவர்களின் ஓட்டு மதிப்பு 1 லட்சத்து 59 ஆயிரத்து 300.
77 செல்லாத ஓட்டுகள்
ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. இதில் 21 ஓட்டுகள் எம்பி.க்களுடையது. மேற்கு வங்க சட்டப்பேரவையில் போட்டப்பட்ட 10 ஓட்டுகளும், டெல்லியில் 6 ஓட்டுகளும், மணிப்பூர், ஜார்க்கண்டில் தலா 4 ஓட்டுகளும், உத்தரப் பிரதேசத்தில் 2 ஓட்டும் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுகளின் மொத்த மதிப்பு 20,942. வாக்களிப்பவர்கள், தங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரின் பெயருக்கு அருகே, குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே டிக் அடிக்க வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் வழங்கிய பிரத்யேக பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை செய்யாதவர்களின் ஓட்டுகள் செல்லாததாக நிராகரிக்கப்பட்டு உள்ளது.
ஜனாதிபதியான முதல் பாஜ தலைவர்
ஜனாதிபதியாக வெற்றி பெற்று ராஷ்டிரபதி பவனில் நுழையும் முதல் பாஜ தலைவர் என்ற பெருமையையும் ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார். இதற்கு முன், 2002 ஜனாதிபதி தேர்தலில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி வேட்பாளராக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. 2007 தேர்தலில் பாஜ வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத், காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பாட்டீலிடம் தோல்வி அடைந்தார். 2012ல் பாஜ.வின் பி.ஏ.சங்கமா, காங்கிரசின் பிரணாப் முகர்ஜியிடம் தோற்றார்.
தமிழகத்தில் ஓட்டு மாறவில்லை
ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் யாருக்கும் மாற்றிப்போடவில்லை. தமிழகத்தில் 234 எம்எல்ஏக்கள் உண்டு. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறாததால் அந்த இடம் காலியாக உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி ஓட்டுப்போடவில்லை. இதனால் 232 எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட்டனர். மீராகுமாருக்கு 98 ஓட்டுக்கள் விழுந்தன. திமுக கூட்டணியின் 98 எம்எல்ஏக்களில் கருணாநிதி ஓட்டுப்போடவில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரி, மீராக்குமாருக்கு வாக்களித்ததால், 98 ஓட்டுக்கள் விழுந்துள்ளன. அதேநேரத்தில், அதிமுகவில் உள்ள 3 அணிகளைச் சேர்ந்த 134 எம்எல்ஏக்களும் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்துள்ளனர்.