Type Here to Get Search Results !

கொழுப்பை கரைக்கும் கத்தரிக்காய்










உடல் வலியைப் போக்கும்

கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக்  கூடியது.  கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின்  ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க  வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது.  100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல்  பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில்  சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.

புத்துணர்வைத் தரும்

கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது  மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது. கத்திரி இலைகள் ஆஸ்த்துமா  எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல்  ஆகியவற்றுக்கும் மருந்தாகிப்  பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு  மருந்தாகிறது.

கொழுப்புச் சத்தைக் குறைக்கும்

வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.  கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான  மருந்தாகும். கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத்  தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.

நார்ச்சத்து

கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து  உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற  கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து  விட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு  முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம்  தரும் வாயு கலையும்.

நல்ல தூக்கத்தை உண்டாக்கும்

கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும்  தூக்கமின்மை அகலும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்.  காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும். கத்தரிக்காய்  அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும். கத்தரிக்காயை அடிக்கடி  உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று  நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.

இதய பாதுகாப்பு

கத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி விடுகின்றது.  கத்தரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின்  அதிகமாவதற்கும் உதவி செய்கிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச்  சத்தைக் குறைத்து வெளியேற்ற  உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால்  இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும்  துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது.

புற்று நோயைத் தடுக்கும் 

கத்தரிக்காய் சீரண உறுப்புகளுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக  அமைகிறது.கத்தரிக்காய் ஓர் நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில்  அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோஆசிட்கள் மற்றும்  நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும்  பெற உதவுகிறது.

பல்வலி குணமாகும்

கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. கத்தரிப்பழத்தை ஊசியினால்  குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad